Skip to main content

போலி மருத்துவர் மூலம் கரோனாவுக்கு சிகிச்சை! சேலம் தனியார் மருத்துவமனைக்கு அதிரடி தடை!!

Published on 23/09/2020 | Edited on 23/09/2020

 

salem district private hospital government order

 

 

சேலத்தில், போலி மருத்துவர் மூலம் கரோனாவுக்கு சிகிச்சை அளித்த விவகாரத்தில், மறு உத்தரவு வரும் வரை கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடாது என்று தனியார் மருத்துவமனைக்கு அதிரடியாக தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

 

சேலம் கொண்டலாம்பட்டி - பெங்களூரு புறவழிச்சாலை அருகே, பிரியம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை என்ற பெயரில் தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. அரசு அனுமதியின்பேரில், இம்மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

 

இம்மருத்துவமனையில், சேலத்தை சேர்ந்த மோகனசுந்தரம் (54) என்பவருக்கு கரோனா காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சில நாள்களுக்கு முன்பு, திடீரென்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

சிகிச்சையில் இருக்கும் கரோனா நோயாளிகள் உயிரிழந்தால் இறந்தவர் தொடர்பான விவரங்கள், அவருக்கு வேறு ஏதேனும் உடல்நல பிரச்சனைகள் இருந்திருந்தால் அதன் விவரங்கள், சிகிச்சை அளித்த மருத்துவர் உள்ளிட்ட விவரங்கள் மாவட்ட சுகாதாரத்துறை, மாவட்ட நிர்வாகம், ஐசிஎம்ஆர் ஆகிய நிர்வாகங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

 

மோகனசுந்தரத்திற்கு, நவீன் என்பவர் சிகிச்சை அளித்துள்ளார். விசாரணையில், அவர் எம்பிபிஎஸ் படிப்பை முழுமையாக நிறைவு செய்யவில்லை என்பது தெரிய வந்தது. இதுகுறித்து சேலம் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப்பணிகள் துறை இணை இயக்குநர் மலர்விழி நேரில் விசாரணை நடத்தினார். ஆனால், நவீன் முறையாக விளக்கம் அளிக்கவில்லை என்று தெரிகிறது. எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்கள், சிஆர்ஆர்ஐ எனப்படும் ஓராண்டு காலம் பயிற்சி மருத்துவராக பணியாற்றுவது கட்டாயம். ஆனால் நவீன் அவ்வாறு பணியாற்றாமலேயே கரோனா சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.

 

நோய்த்தொற்று காலத்தில் முறையாக மருத்துவப் படிப்பை முடிக்காத ஒருவர், சிகிச்சை அளிப்பது என்பது மருத்துவத்துறை அறத்திற்கு எதிரானது. இதையடுத்து, பிரியம் மருத்துவமனை இனி கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடாது என்றும், அதற்காக வழங்கப்பட்டு இருந்த அரசு அனுமதியும் உடனடியாக ரத்து செய்தும் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப்பணிகள் துறை திங்களன்று (செப். 21) அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

 

இது தொடர்பாக நாம் மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப்பணிகள் அதிகாரிகளிடம் கேட்டபோது, ''பிரியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கரோனா நோயாளி ஒருவர் இறந்துவிட்டார். அதுகுறித்த விசாரணையின்போதுதான், மருத்துவர் நவீன் என்பவர் போதிய கல்வித்தகுதி இல்லாமல் சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது. அவருக்கு மருத்துவருக்கான பதிவெண்கூட போலியாக இருப்பது தெரிய வந்தது. அவர்தான் இறந்துபோன நோயாளிக்கும் சிகிச்சை அளித்து வந்துள்ளார். அதனால் அந்த மருத்துவமனை, இனி கரோனா நோயாளிகளுக்கு அட்மிஷன் வழங்கவோ, சிகிச்சை அளிக்கவோ கூடாது. அதற்கான அனுமதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது,'' என்றனர்.

 

இது ஒருபுறம் இருக்க, கொண்டலாம்பட்டி காவல்நிலையத்தில் போலி மருத்துவர் நவீன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது சம்பந்தமாக கொண்டலாம்பட்டி காவல் ஆய்வாளர் புஷ்பராணியிடம் கேட்டபோது, ''கரோனா நோயாளிக்கு சிகிச்சை அளித்த நவீன் என்பவர், மருத்துவர் படிப்பை நிறைவு செய்யவில்லை என்று புகார் வந்துள்ளது. அவர், எந்த கல்லூரியில், எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு வரை படித்தார் என்பது உள்ளிட்ட விவரங்களை விசாரித்து வருகிறோம்,'' என்றார்.

 

நவீன் மீதான புகாரின் பேரிலேயே பிரியம் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் கரோனா சிகிச்சைக்காக அதிக கட்டணம் வசூலித்ததால்தான் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் பரவின. இது தொடர்பாக அங்கு சிகிச்சை பெற்ற கரோனா நோயாளி ஒருவரிடம் விசாரித்தபோது, நோயின் தீவிர தன்மைக்கு ஏற்ப சிகிச்சையும், அதற்குரிய கட்டணமும் மாறுபடுகிறது என்றார்.

 

புகாருக்குரிய போலி மருத்துவர் நவீன் ஒரு நாளைக்கு 2500 ரூபாய் வீதம் மருத்துவர் கட்டணமாக பெற்றுள்ளார். நாளொன்றுக்கு உணவுக்கட்டணம் 300 ரூபாய், உடல் முழுவதும் மூடியிருக்கும் 'பிபிஇ கிட்' உடை ஒரு செட்டுக்கு 350 ரூபாய் வீதம் 30 செட்டுக்கு 10,500 ரூபாய், ஆய்வகத்திற்கு 13,277 ரூபாய், மருந்தக கட்டணமாக 85 ஆயிரம் ரூபாய், இன்னொரு மருத்துவருக்கான கட்டணமாக நாளொன்றுக்கு தலா 2500 ரூபாய் என 7 நாள்கள் சிகிச்சை பெற்ற ஒரு நோயாளியிடம் 1.80 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளதாக, அங்கு சிகிச்சை பெற்ற மற்றொரு நோயாளி கூறினார்.

 

எனினும், இம்மருத்துவமனையைக் காட்டிலும் சேலத்தில் 10 நாள் சிகிச்சைக்கு 6 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளும் இருக்கின்றன என்றும் சில மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 

கரோனா நோயாளிக்கு போலி மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டதும், அதனால் தனியார் மருத்துவமனைக்கு கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தடை விதிக்கப்பட்டதும் சேலத்தில் மருத்துவத்துறை மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

முதல் தலைமுறையினர் வாக்கு யாருக்கு? சுவாரஸ்யமான தகவல்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Interesting facts about who the first generation voted for

நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்த இளைஞர்கள் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வாக்களித்திருப்பதும், சமூக  நலத்திட்டங்கள், ஊழல் ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு  வாக்களித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி தேர்தல் நடந்தது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனை போட்டி நிலவியது. தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர். முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் ஆதரவு யாருக்கு? என்பதில் அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் முதன் முதலாக வாக்களித்துவிட்டு வந்த இளைஞர்கள், இளம்பெண்களிடம் பேசினோம். அவர்கள் ஊழல் மற்றும் சமூக நலத்திட்டங்களின் அடிப்படையில் வாக்களித்து இருப்பதும், பெரும்பாலானோர் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்திருப்பதும் தெரிய வந்தது.

இதில் இன்னொரு சுவாரஸ்ய தகவலும் கிடைத்தது. முதல் முறை வாக்களித்தவர்களில் இளம்பெண்கள் மாநில அரசின் செயல்திட்டங்களின் அடிப்படையிலும், இளைஞர்கள் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது ஒரே வயதாக இருந்தாலும் இளம்பெண்கள், இளைஞர்களின் சிந்தனை வேறு வேறாக இருக்கிறது. என்றாலும், அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படையாக கூற மறுத்துவிட்டனர். எனினும், நம்முடைய கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் மூலம், யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கிட்டத்தட்ட யூகிக்க முடிந்தது.

முதல்முறையாக வாக்களித்த அனுபவம் எப்படி இருந்தது?, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் பெற்றோரின் தலையீடு இருந்ததா?, உங்கள் வாக்கு தேசிய கட்சிக்கா? அல்லது மாநில கட்சிக்கா?, எதன் அடிப்படையில் வாக்களித்தீர்கள்?, உங்களைக் கவர்ந்த தமிழக அரசின் திட்டங்கள் என்னென்ன? ஆகிய கேள்விகளை முன்வைத்தோம். சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் முதல் தலைமுறை வாக்காளர்கள் சிலரைச் சந்தித்தோம். அவர்கள் கூறியதாவது..

 Interesting facts about who the first generation voted for

அக்ஷய பிரியா(பி.எஸ்சி., மாணவி): முதல்முறையாக வாக்குச்சாவடிக்கு வந்து  வாக்களித்ததே ஜாலியான அனுபவமாக இருந்தது. யார் அதிகாரத்திற்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமோ அதை மனதில் வைத்தும், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டும் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பூர்ணிமா(பி.இ., மாணவி): ஒரு குடிமகளாக வாக்களிப்பது நமது கடமை. யாருக்கு ஓட்டுப் போடணும் என்று அப்பா, அம்மா உட்பட யாருடைய தலையீடும் இல்லாமல் நானாக சிந்தித்து வாக்களித்தேன். யார் வந்தால் நல்லது செய்வாங்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். நான் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இப்போதுள்ள அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் உள்ள நல்லது, கெட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

 Interesting facts about who the first generation voted for

அகல்யா(பி.காம்., சி.ஏ., மாணவி): முதல் முறையாக வாக்களிக்கப் போகிறோம் என்பதே சந்தோஷமாகத்தான் இருந்தது. எங்களுக்குனு ஒரு அடையாள அட்டை கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் இப்போதுள்ள அரசும் நல்லாதான் செயல்படுகிறது. இன்னும் சிறப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.

சவுந்தர்யா(எம்.ஏ., மாணவி, அகல்யாவின் சகோதரி): இந்த நாட்டுக்கு ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை எங்களிடம் கொடுத்திருக்கிறார்களே என்று பெருமையாக இருக்கிறது. நானும், என் சகோதரி அகல்யாவும் ஒரு தேசியக் கட்சிக்குதான் ஓட்டுபோட்டோம். நாடு நல்ல நிலையில் செல்ல வேண்டும் என்பதாலும், வலிமையான பிரதமர் வேண்டும் என்பதாலும் வாக்களித்தோம். இப்போதுள்ள மத்திய அரசும், தமிழகத்தில், திமுக அரசும் நன்றாகத்தான் செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

நிவேதா(பி.ஏ., மாணவி): முதன் முதலாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது புது அனுபவமாக இருந்தது. நல்லவங்களுக்கு ஓட்டு போட்டிருக்கேன். பாரம்பரியான தேசியக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று சிந்தித்து வாக்களித்தேன். அரசு கலைக் கல்லூரியில் படிக்கிறேன். தமிழக அரசின் மகளிருக்கான இலவச பேருந்து திட்டமும், புதுமைப்பெண் திட்டமும் பிடித்திருக்கிறது.

 Interesting facts about who the first generation voted for

வெற்றிவேல் (பி.இ., மாணவர்): 140 கோடி மக்களுக்கான அரசை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை உணர்ந்து எல்லோருமே வாக்களிப்பது அவசியம். வாக்குப்பதிவு குறைவதை தடுக்க, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம். வெளியூர்களில் வேலைக்குச் சென்றவர்களால் சொந்தஊருக்குச் சென்று வாக்களிக்க முடியாததும் வாக்குப்பதிவு குறைய முக்கிய காரணம். தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகமாக இருந்தும், போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச்செல்வது அதிகரித்துள்ளது. அதனால் நம் மாநிலத்திலேயே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு புதிய சிந்தனையுடன் புதியவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். நம்மை நாம்தான் ஆள வேண்டும் என்பதை மனதில் வைத்து வாக்களித்தேன். தமிழ்நாட்டில் இதற்கு முன்பும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருந்தாலும், இப்போது அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. எங்கள்  கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள்கூட கஞ்சா பயன்படுத்துவதை நேரடியாக பார்த்திருக்கிறேன். இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்திருக்கிறேன். இங்கு எல்லோருக்கும் எல்லாமும் போய்ச் சேருவதில்லை. சாமானியர்களால் எந்தத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

 Interesting facts about who the first generation voted for

பிரதீப்குமார் (பி.இ., மாணவர்): வாக்களிப்பது நமது கடமை என்பதால், முதல் தலைமுறை வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதில் யாரும் தலையிடக்கூடாது என்று என் பெற்றோரிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன். பிறரை குற்றம் சொல்வதை விட, நான் அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்யப்போகிறேன் என்று சொல்வதை வைத்து வாக்களித்தேன். இதுவரை மாறி மாறி ஆட்சியில் இருந்தவர்கள் எந்த வகையிலாவது மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருந்துள்ளனர். எனக்கு தேசியக் கட்சிகள் மீது பெரிதாக ஆர்வம் இல்லாததால், மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை யார் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை விரும்பவில்லை. அதனால் புதியவருக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பவித்ரா (பிகாம்., மாணவி): முதல்முறையாக ஓட்டு போட்டபோது நான் கொஞ்சம் பெரிய பொண்ணாகிட்டேன் என்றும், பொறுப்புமிக்க குடிமகள் ஆகிட்டேன் என்ற உணர்வும் ஏற்பட்டது. எனக்கு மட்டுமின்றி, எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று யோசித்து வாக்களித்தேன். என்னைப்போன்ற இளம் தலைமுறையினருக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். ஒரே கல்வித் தகுதி இருந்தும் சிலருக்கு முன்னுரிமை கிடைக்கிறது. சிலர், சில காரணங்களால் ஒதுக்கப்படுகின்றனர். இப்படி எந்த விதமான மத, சாதி வேறுபாடுகளும் இருக்கக்கூடாது என்றுயோசித்து வாக்களித்தேன். சாதி, மத வேறுபாடுகளின்றி எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். தமிழக அரசின் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் திட்டங்கள் பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் இந்த அரசு உணவு கொடுப்பது பிடித்திருக்கிறது. நான் ஒருமாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

அக்ஷயா (பி.ஏ., தமிழ்): எனக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்ததில் இருந்தே முதன் முறையாக வாக்களிக்கப் போவதை எண்ணி ஆர்வமாக இருந்தேன். இந்த நாட்டுக்கு பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இதுவரை ஆட்சியில் இருக்கும் கட்சிக்குதான் வாக்களித்தேன். அவர்களை ஆதரிப்பதன் மூலம் மேலும் நல்ல திட்டங்கள் கிடைக்கும் என நம்புகிறேன். பெண்களுக்கு இலவச பஸ், மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தருவது மேற்படிப்புக்கு உதவியாக இருக்கிறது. தமிழக அரசு, பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது. பெண்களை ஊக்குவிக்கும் விதமாக மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதைவரவேற்கிறேன். இதை பிச்சை என்று சிலர் விமர்சிப்பதை ஏற்க முடியாது. நாம் யாரை தேர்ந்தெடுத்தோமோ அவர்கள்தான் நமக்கு உரிமைத் தொகையாக தருகிறார்கள். அதை பிச்சை என்றுசொல்ல முடியாது.

 Interesting facts about who the first generation voted for

சுரேகா (பி.இ., மாணவி): முதல் முறையாக தேர்தலில் வாக்களித்தது மகிழ்ச்சியாக இருக்கு. மக்களுக்கு நல்லது செய்யும் கட்சிக்கு ஓட்டுப் போடும்படி அம்மா சொன்னாங்க. அவர் சொன்ன கட்சிக்கே வாக்களித்தேன். மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இலவச பஸ் திட்டமும், மகளிருக்கு உரிமைத்தொகை திட்டமும் பிடிச்சிருக்கு. குறிப்பாக, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அரசு செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

பூஜா மற்றும் ராகுல்: ராஜஸ்தான் மாநிலம்தான் எங்களுடைய பூர்வீகம். தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டோம். நாங்கள் பிறந்தது, படித்தது எல்லாம் இங்குதான். எங்கள் மாநிலத்தை விட தமிழ்நாட்டு கலாச்சாரமும், உணவும் பிடித்திருக்கிறது. ஆனாலும் நாங்கள் தேசியக்கட்சிக்குதான் வாக்களித்தோம். இவ்வாறு இளம் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் அனுபவங்களையும், கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.