Skip to main content

எல்லையில் வீரமரணம் அடைந்த சேலம் ராணுவ வீரர்! 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்!!

Published on 07/06/2020 | Edited on 07/06/2020
salem district army man incident district collector

ஜம்முவில் பாகிஸ்தான் ராணுவத்துடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் வீர மரணம் அடைந்த சேலம் ராணுவ வீரரின் உடல், 21 குண்டுகள் முழங்க, சனிக்கிழமையன்று (ஜூன் 6) சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே உள்ள சித்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெற்றிலைக்காரன் காடு பகுதியைச் சேர்ந்த பெத்தா கவுண்டர். இவருடைய மகன் மதியழகன் (40). இந்திய ராணுவத்தில், 17- வது மெட்ராஸ் படைப்பிரிவில் ஹவில்தாராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர், கடந்த 4- ஆம் தேதியன்று, ஜம்மு யூனியன் பிரதேசத்தில் அக்னூர் செக்டர் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தியது. அவர்களை எதிர்த்துப் போரிட்ட மதியழகன், துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவருக்கு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். 

இதையடுத்து தனி விமானத்தில் அவருடைய உடல், கோவைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சொந்த ஊரான இடைப்பாடி வெற்றிலைக்காரன் காட்டுக்கு சனிக்கிழமை (ஜூன் 6) மாலையில் கொண்டு வரப்பட்டது. மதியழகனின் உடலில் தேசியக்கொடி போர்த்தப்பட்டது. வீட்டு வராண்டாவில் அவருடைய உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ஒரு மணி நேரம் வைக்கப்பட்டது.  

salem district army man incident district collector

இதையடுத்து, அவருடைய வீட்டுக்குப் பின்பக்கம் உள்ள அவர்களுடைய தோட்டத்தில் உடல் கொண்டு செல்லப்பட்டு, ராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 

அதன்பிறகு சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மாவட்ட எஸ்பி தீபா கனிகர், திமுக எம்பி பார்த்திபன், திமுக எம்எல்ஏ ராஜேந்திரன் மற்றும் அதிமுக, தேமுதிக, பாஜக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து மதியழகனின் உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசியக்கொடி அகற்றி, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், 21 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. மதியழகனின் தந்தை பெத்தா கவுண்டர் இறுதிச்சடங்குகளை செய்தார். 

வீரமரணம் அடைந்த மதியழகனுக்கு தமிழரசி (32) என்ற மனைவியும், 12 வயதில் ஒரு மகனும், 8 வயதில் மகளும் உள்ளனர். மனைவி தமிழரசி கூறுகையில், ''என் கணவர் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்துள்ளார். அது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. ஆனாலும், எங்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களை நல்லபடியாக படிக்க வைத்து, வளர்த்து ஆளாக்க தமிழக அரசு உதவி செய்ய வேண்டும். நான் எம்.ஏ., படித்திருக்கிறேன். எனக்கும் ஏதாவது அரசு வேலை வழங்கி உதவிட வேண்டும்,'' என்றார்.

முன்னதாக, சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், வீரமரணம் அடைந்த மதியழகனின் குடும்பத்தினரிடம் தமிழக முதல்வர் அறிவித்தபடி, 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை நிவாரண நிதியாக வழங்கினார். 

மதியழகன் மரணத்தால் சொந்த ஊர் மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.