
கரூரில் பிரபல ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியான சின்னவண்டான் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் தமிழழகன். பென்சில் தமிழழகன் என அழைக்கப்படும் இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர். தமிழர்களின் கூட்டாளிகள் பிரகாஷ், மனோஜ் உள்ளிட்ட நான்கு பேர் கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பேருந்துக்காக காத்திருந்த பயணியிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டதோடு கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு தமிழழகனின் கூட்டாளிகள் பிரகாஷ், மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் தமிழழகன் தப்பி ஓடியதாகக் கூறப்பட்ட நிலையில் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு மேம்பாலம் அருகிலிருந்த தமிழழகனை பிடிக்கும் முன்ற பொழுது பதிலுக்கு போலீசாரை தாக்க முயன்றுள்ளார். இதனால் கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் துப்பாக்கியால் தமிழழகனை வலது கால் முட்டிக்கு கீழ் சுட்டுப் பிடித்துள்ளார். கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக தமிழழகன் அனுமதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.