Skip to main content

சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு பேரணி; ஆர்வத்துடன் கலந்து கொண்ட கல்லூரி மாணவர்கள்

Published on 08/02/2023 | Edited on 08/02/2023

 

road traffic rules awareness two wheeler rally in trichy 

 

திருச்சி மாநகரில் சாலை விதிகளை மதிக்க வேண்டும். சாலை விதிகளை பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும் என்பது குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வை ஏற்படுத்த திருச்சி மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் தலைக்கவசத்துடன் கூடிய இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியானது இன்று நடைபெற்றது.

 

பேரணியை திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சத்திய பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணியில்  காவலர்கள் கல்லூரி மாணவர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் திருச்சி புனித வளனார் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

 

மேலும் சாலைகளில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசத்துடன் வந்த வாகன ஓட்டிகளை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களை பாராட்டி மாநகர காவல்துறை ஆணையர் மரக்கன்றுகளை பரிசாக அளித்து உற்சாகப்படுத்தினார். இந்த விழிப்புணர்வு பேரணியானது சத்திரம் பேருந்து நிலையத்தில் தொடங்கி மரக்கடை, ராமகிருஷ்ணா பாலம், தில்லை நகர், மாரிஸ் திரையரங்கு பாலம் வழியாக கடந்து வந்து மீண்டும் புனித வளனார் கல்லூரியை வந்தடைந்தது. இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர காவல் துறை துணை ஆணையர் அன்பு, உதவி ஆணையர்கள் ஜோசப் நிக்சன், சுந்தரமூர்த்தி மற்றும் ஆய்வாளர்கள் போக்குவரத்து காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்