தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் நேற்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. சென்னையில் சாலைகளில் நேற்று மழை நீர் தேங்கியது. இதன் காரணமாக நேற்று முதல் அமைச்சர்கள் மழை நீர் தேங்கிய பகுதிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். தேங்கிய மழை நீரை அகற்றும் பணிகளிலும் மாநகராட்சி நிர்வாகிகளை ஈடுபடுத்தியுள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை வட தமிழகத்தின் ஒருசில இடங்களிலும் தென் தமிழகத்தின் ஒருசில இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.