Skip to main content

“என்னை மன்னித்துவிடுங்கள்...” - அரசு கலை விழாவில் முதல் பரிசு வென்ற மாணவி நெகிழ்ச்சி! 

Published on 31/12/2022 | Edited on 31/12/2022

 

Puthukkottai government school student who won first prize in state Art festival

 

பள்ளி மாணவர்களுக்கு படிப்பு, தேர்வு, மதிப்பெண் மட்டுமே போதுமானதில்லை. விளையாட்டு, பேச்சு, கட்டுரை, நடனம், நாட்டியம், பாட்டு, ஓவியம், கைவண்ணம், கலை என அவர்களிடம் ஒளிந்திருக்கும் தனித் திறன்களையும் வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதற்காக தமிழக அரசு கலைத் திருவிழாவை நடத்தி வருகிறது.

 

கடந்த மாதத்தில் ஒவ்வொரு ஒன்றியம், மாவட்ட அளவில் நடந்த கலைப் போட்டிகளில் ஏராளமான அரசுப் பள்ளி கிராமப்புற மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிக்காட்டினார்கள். மாவட்ட அளவில் தேர்வான மாணவ, மாணவிகளுக்குத் தற்போது சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 இடங்களில் மாநில அளவிலான கலைத் திருவிழா நடந்து முடிந்துள்ளது.

 

Puthukkottai government school student who won first prize in state Art festival

 

இதில் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளும் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து நூற்றுக்கணக்கான அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளும் பங்கேற்றுள்ளனர். இதில் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி +2 மாணவி அ.சர்மிளா சென்னையில் நடந்த கலைத் திருவிழாவில் மணல் சிற்பம் உருவாக்கும் போட்டியில் கலந்து முதலை உருவத்தை வடிவமைத்து மாநில அளவில் முதல் பரிசு பெற்றுள்ளார். முதல் பரிசு பெற்று சொந்த ஊருக்குத் திரும்பியுள்ள மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) குகன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பாராட்டி மகிழ்ந்தனர்.

 

இது குறித்து சாதனை மாணவி சர்மிளா நம்மிடம் பேசும்போது, “தமிழக அரசு மாணவ, மாணவிகளின் தனித்திறன்களை வெளிக்கொண்டு வரும் வாய்ப்பாக கலைத் திருவிழா நடத்துவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ஆண்டு போட்டிகளில் பங்கேற்க ஆர்வம் இருந்தது. ஆனால் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றபோது மணல் சிற்பம் செய்யலாம் என முடிவெடுத்தேன். இது பற்றி ஆசிரியர்களிடம் சொன்ன பிறகு ஆசிரியைகள் எனக்கு சில நாள் பயிற்சி கொடுத்தாங்க. முதலை சிற்பம் செய்யலாம் என முடிவு செய்து முதல் போட்டியில் தொடங்கி இறுதி போட்டி வரை ஒரே உருவத்தைத்தான் வடிவமைத்தேன். பரிசு கிடைத்திருக்கிறது.

 

Puthukkottai government school student who won first prize in state Art festival

 

போட்டியில் பங்கேற்க மணல் நானே கொண்டு செல்ல வேண்டும். ஆலங்குடி, புதுக்கோட்டைக்கு கீரமங்கலத்தில் இருந்தே ஆட்டோவில் மணல் மூட்டைகள் கொண்டு போனேன். அதே போல சென்னைக்கும் வீட்டிலிருந்து கொஞ்சம் மணல் மட்டும் எடுத்துக் கொண்டு சென்று சென்னையில் 10 மூட்டை மணல் ரூ.2 ஆயிரத்திற்கு வாங்கி போட்டி நடக்கும் இடத்திற்கு பேருந்தில் ஏற்றினால் ஏற்றக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள். அதனால் ஒரு காரில் மணல் மூட்டைகளை ஏற்றிச் சென்று 28 பேரோடு போட்டியில் கலந்து கொண்டேன். பலர் மணலில் பசை, வண்ணம் கலந்திருந்ததால் அவர்களுக்குப் பரிசு கிடைக்கவில்லை. ஆனால் நான் விதிமுறைகளை முன்பே தெரிந்து கொண்டு மணல் மட்டுமே பயன்படுத்தி முதலை உருவம் வடிவமைத்தேன். என் உருவம் வடிவமைப்பு முடிந்த பிறகு மற்றவர்களின் சிற்பங்களை பார்த்து வியந்தேன். நமக்கு பரிசு கிடைக்குமா என்று நினைத்தேன். ஆனால் முழுமையாக மணல் பயன்படுத்தி வேறு ஏதும் கலக்காமல் செய்ததால் எனக்கே முதல் பரிசு கிடைத்திருப்பது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.

 

மற்றவர்களும் ரொம்ப அருமையாக வடிவமைத்திருந்தார்கள் ஏதோ சில காரணங்களால் பரிசு கிடைக்காமல் இருந்திருக்கலாம் அதனால் என்னை மன்னித்துவிடுங்கள். ஆனாலும் அவர்கள் எனக்கு ஆதரவாக இருந்தார்கள் எல்லாருக்குமே நன்றி சொல்லிக்கிறேன். அதே போல ரொம்ப தூர கிராமங்களில் இருந்து வரும் என்னைப் போன்ற போட்டியாளர்களுக்குத் தேவையான மூலப் பொருட்கள் கொண்டு வருவது சிரமமாக இருப்பதால் விழா குழுவே மூலப் பொருட்களைக் கொடுத்தால் நன்றாக இருக்கும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமை ஆசிரியரின் கீழ்த்தரமான செயல்! ஆவேசமான பெற்றோர்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
POCSO Case register on government school teacher

ஓமலூர் அருகே, சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியரை பணியிடைநீக்கம் செய்து, சேலம் மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள செம்மண்கூடல் ஊராட்சிக்கு உட்பட்ட, கந்தம்பிச்சனூரில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 128 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். வாழப்பாடி அருகே உள்ள சோமம்பட்டியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், சில மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார்கள் கிளம்பின. 

இதையறிந்த பெற்றோர்கள் திரண்டு சென்று மார்ச் 11ஆம் தேதி காலை, பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளியை இழுத்து மூடி பூட்டு போட்டு, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். திடீரென்று மக்கள் திரண்டு வந்து மறியலில் இறங்கியதால் அந்தப் பகுதியே களேபரமாக மாறியது. இந்நிலையில், தகவல் அறிந்த தாரமங்கலம் காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர். சேலம் மாவட்டக் கல்வி அலுவலர் சந்தோஷ் மற்றும் தொடக்கக் கல்வித்துறை ஊழியர்களும் சென்று பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோரிடம் பேசினர். 

அப்போது அவர்கள், தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணனை உடனடியாக பணியிடைநீக்கம் மற்றும் கைது செய்யும்படி ஆவேசமாக கூறினர். மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தகவலை முன்பே அறிந்து இருந்தும் அதை தெரியப்படுத்தாமல் மூடி மறைத்த ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி கோரினர். பள்ளியில் அனைத்து வகுப்பு அறைகளிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தவும் கோரிக்கை விடுத்தனர். 

பெற்றோர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். மேலும், நிகழ்விடத்திலேயே தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணனை பணியிடைநீக்கம் செய்து மாவட்டக் கல்வி அலுவலர் சந்தோஷ் உத்தரவிட்டார். இதையடுத்து பெற்றோர்கள், போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதற்கிடையே, ஓமலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் ராதாகிருஷ்ணன் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், பள்ளி மீதான இதர புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தவும், தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தால் கே.ஆர்.தோப்பூர் - முத்துநாயக்கன்பட்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

Next Story

மாணவிகளிடம் ஆபாசப்படம் காட்டிய அரசுப்பள்ளி ஆசிரியர் கைது

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
Government school teacher arrested under pocso

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே உள்ள புக்கம்பட்டி அரசுத் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் ஜியாவுல்ஹக். இவர், தன்னுடைய பள்ளியில் படித்து வரும் மாணவிகளை தனியாக அழைத்து, அலைபேசியில் ஆபாசப்படங்களைக் காண்பித்து, பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவிகள் பலர், பள்ளிக்குச் செல்ல மறுத்து வீட்டிலேயே இருந்துள்ளனர். இதுகுறித்து அவர்களின் பெற்றோர்கள் விசாரித்தபோதுதான், ஆசிரியர் ஜியாவுல்ஹக்கின் தகிடுதத்தங்கள் வெளியே தெரியவந்தன. 

அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், இதுபற்றி பள்ளித் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, தலைமை ஆசிரியர் தனம், மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தன்னுடைய லீலைகள் காவல்துறை வரை சென்றதை அறிந்த ஆசிரியர் ஜியாவுல்ஹக், திடீரென்று தலைமறைவானார். முதல்கட்ட விசாரணையில் ஜியாவுல்ஹக் மீதான புகாரில் உண்மை இருப்பது தெரியவந்ததை அடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

தீவிரமாகத் தேடப்பட்டு வந்த நிலையில், பிப். 17ம் தேதி ஆசிரியர் ஜியாவுல்ஹக்கை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு, அவரை மத்திய சிறையில் அடைத்தனர். பாலியல் விவகாரத்தில் ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம், மேச்சேரி சுற்று வட்டாரத்திலும், தொடக்கக் கல்வித்துறை வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.