Skip to main content

கரோனா - 843 பேர் தொடர் கண்காணிப்பு: புதுக்கோட்டை கலெக்டர் தகவல்

Published on 25/03/2020 | Edited on 25/03/2020

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் 843 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறித்து மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த மாவட்ட நிர்வாக ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி, தலைமையில் எஸ்.பி அருண்சக்திகுமார் முன்னிலையில் நடந்தது. கூட்டம் முடிந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி. ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
 

அப்போது மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி, புதுக்கோட்டை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.. 5 நபர்களுக்கு மேல் பொது இடங்களில் கூடக் கூடாது. அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி மக்களுக்குக் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது. முன்பே திட்டமிடப்பட்ட திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்வுகள் மண்டபங்களில் நடத்தக்கூடாது. வருகிற 31-ந் தேதி வரையில் திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. விழாதாரர்கள் திருமண நிகழ்ச்சிகளை வீடுகளில் எளிய முறையில் நடத்த அறிவுறுத்தபடுகிறது. புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 

 

pudukkottai



 

வெளிநாடுகளில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்துள்ள 843 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 140 பேர் பொது மக்களால் அடையாளம் காட்டப்பட்டவர்கள், மேலும் சுகாதாரத் துறையின் கவனத்திற்கு வராமல் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் தகவல் குறித்து இலவச எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம். தனிமைப்படுத்தப்பட்ட அவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணியில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் கைகளில் முத்திரை குத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. வெளிநாட்டில் இருந்து வந்து, தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி அருண்சக்திகுமார் கூறும் போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் 1600 போலீசார் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாவட்ட எல்லைகளில் 10 சோதனை சாவடிகளும், மாவட்டத்தின் உட்புறங்களில் 38 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட தொடங்கி உள்ளனர். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 4 சுங்கச் சாவடிகளிலும் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட உள்ளனர். 


அமைக்கப்பட உள்ள சோதனை சாவடிகளில் போலீசாருடன், சுகாதார பணியாளர்கள் இணைந்து செயல்பட உள்ளனர். அதேபோல் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நபர்களை சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித் துறையினருடன் இணைந்து போலீசாரும் கண்காணிக்க  உள்ளனர். அவர்களைக் கண்காணிக்கத் தனி செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. இதையும் மீறி தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே வந்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 
 

இதேபோல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். ஜாமினில் வெளியே வந்தவர்கள், ரவுடிகள், மது பானங்களை பதுக்கி விற்பவர்கள் உள்ளிட்டோர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்றார்.
             
 


 

சார்ந்த செய்திகள்