Skip to main content

விசைத்தறி உரிமையாளர் குடும்பத்துடன் தூக்கிட்டு தற்கொலை: செல்போன் அழைப்புகளை வைத்து போலீசார் விசாரணை

Published on 27/01/2022 | Edited on 27/01/2022

 

Power locomotive owner passes away with family; Police investigate cell phone calls!

 

நாமக்கல் அருகே விசைத்தறி பட்டறை உரிமையாளர் மனைவி, மகளுடன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயர முடிவுக்கான காரணம் குறித்து அவர்களின் செல்போன் அழைப்புகளை வைத்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். 

 

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்துள்ள கோயக்காட்டைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (55). அதே ஊரில் விசைத்தறி பட்டறை நடத்தி வந்தார். இவருடைய மனைவி நீலாம்பாள் (50). இவர்களுக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் பிரீத்தி (21), திருமணமாகி ராசிபுரத்தில் குடும்பத்துடன் வசிக்கிறார். 16 வயதான இளைய மகள் தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். 

 

மூத்த மகள் பிரீத்தி அன்றாடம் பெற்றோரிடம் செல்போனில் பேசுவது வழக்கம். அதன்படி, ஜன. 25ம் தேதி மதியம், பெற்றோருக்கு போன் செய்துள்ளார். பல முறை அழைத்தபோதும் யாரும் செல்போனை எடுக்கவில்லை. சந்தேகம் அடைந்த அவர், வீட்டின் அருகே உள்ள சித்தப்பா மகன் சரண் என்பவருக்குச் செல்போனில் தொடர்பு கொண்டார். 

 

இதையடுத்து சரண், பெரியப்பா வீட்டிற்குச் சென்று பார்த்தார். அங்கு மாடியில் உள்ள அறையில் வெங்கடாசலம், நீலாம்பாள், இளைய மகள் ஆகியோர் தூக்கில் சடலமாகத் தொங்குவது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உறவினர்கள், காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். திருச்செங்கோடு புறநகர் காவல்நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலங்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். உடற்கூராய்வுக்காக சடலங்களைத் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

முதற்கட்ட விசாரணையில், விசைத்தறி உரிமையாளர் வெங்கடாசலத்திற்கு கடன் தொந்தரவுகளோ, பெரிய அளவில் தொழில் நட்டம் ஏற்பட்டதாகவோ அல்லது மூத்த மகளின் குடும்பத்திலோ எந்தப் பிரச்சனையும் இருப்பதாகத் தெரியவில்லை. இதனால் குடும்பமே தற்கொலை செய்து கொண்டதற்கான காரணங்களை உடனடியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. சம்பவம் நடந்த வீட்டில் தேடிப்பார்த்ததில் தற்கொலை குறிப்புகளோ கடிதங்களோ எதுவும் கைப்பற்றப்படவில்லை.

 

அவர்களில் யாருக்காவது தீராத உடல் பாதிப்புகள் இருந்ததா, இளைய மகளுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு அதனால் இப்படியொரு துயர முடிவை எடுத்தார்களா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. வெங்கடாசலம் மற்றும் இளைய மகள் ஆகியோரின் செல்போன்களைக் கைப்பற்றி, அதில் பதிவான அழைப்புகளை வைத்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.