Skip to main content

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு ஒத்திவைப்பு!

Published on 29/09/2021 | Edited on 29/09/2021

 

Pollachi incident case adjourned

 

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தமிழ்நாட்டில், மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. திருநாவுக்கரசு, ரிஷ்வந்த் என்கிற சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய ஐந்து பேர் ஏற்கெனவே இவ்வழக்கு தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டு, சேலம் மத்தியச் சிறையில் இருக்கின்றனர். இந்தப் புகார் தொடர்பாக சி.பி.ஐ விசாரித்து வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, கோவை மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வருகிறது.

 

Pollachi incident case adjourned

 

இந்த நிலையில், இந்த வழக்கில் ஆச்சிபட்டியைச் சேர்ந்த ஹேரேன் பால், வடுகபாளையத்தைச் சேர்ந்த பாபு என்கிற பைக் பாபு, அருளானந்தம் ஆகியோர் சி.பி.ஐ காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். தற்போது சிறையில் இருக்கும் அருளானந்தம், பொள்ளாச்சி அதிமுக முன்னாள் நகர மாணவரணிச் செயலாளராக இருந்தவர். அருளானந்தம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்த வழக்கில் கடந்த 11.08.2021 அன்று அவ்வழக்கின் மீதான விசாரணையில், பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கோவை நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதுவரை 8 இளம்பெண்கள் இந்த சம்பவத்தில் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகள் குறித்து இவ்வழக்கில் புகாரளித்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் காணொலி காட்சி மூலம் கோவை நீதிமன்றத்தில் விசாரணைக்கு இன்று ஆஜராகிய நிலையில், வழக்கு விசாரணை அக்.6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்