Skip to main content

கள்ள நோட்டு கும்பல் கைது! 2 சொகுசு கார், ரொக்கம் பறிமுதல்!

Published on 21/06/2019 | Edited on 21/06/2019

ஆத்தூர் அருகே, கள்ள நோட்டு கும்பலைச் சேர்ந்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இரண்டு சொகுசு கார்கள், 6.20 லட்சம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த தாண்டவராயபுரத்தைச் சேர்ந்த சுரேஷ், மும்முடி பகுதியைச் சேர்ந்த மணி ஆகிய இருவரும் கடந்த நான்கு நாள்களில் அடுத்தடுத்து கடத்தப்பட்டனர். அவர்களை காவல்துறையினர் தனிப்படையினர் அமைத்து தேடி வந்தனர்.

 Police arrest counterfeit note gang,2 Luxury car, cash seized!


இந்நிலையில், ஜூன் 19ம் தேதி மதியம் மல்லியக்கரை அருகே உள்ள கருத்த ராஜபாளையத்தில் ஒரு கார் வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த காரை மக்கள் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்து, மல்லியக்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், காரை ஓட்டி வந்தவர் சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (23) என்பது தெரிய வந்தது. மல்லியக்கரையில் ஆட்டோ மீது அருண்குமாரின் கார் மோதி உள்ளது. அதனால்தான் அந்தப்பகுதி மக்கள் காரை துரத்தி வந்தது தெரிய வந்தது. 

பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அவருக்கு, கள்ளநோட்டு கும்பலுடன் நெருக்கமான தொடர்பு இருப்பதும், தூத்துக்குடியைச் சேர்ந்த பிரதீப் (42) என்பவன்தான் கள்ளநோட்டு கும்பலுக்கு தலைவனாக செயல்படுவதும், அவன் தற்போது கரூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது.

 

 Police arrest counterfeit note gang,2 Luxury car, cash seized!


இதையடுத்து, அருண்குமாரை காவல்துறையினர் பிரதீப்பிடம் செல்போனில் பேச வைத்தனர். அருண்குமார் அழைத்ததன் பேரில், பிரதீப் மற்றும் அவனுடைய கூட்டாளிகளான திருச்சி சதீஸ்குமார் (30), சின்னசேலம் மேனகா (28) ஆகியோர் மல்லியக்கரைக்கு வந்தனர். அப்போது அவர்களை காவல்துறையினர் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 2 சொகுசு கார்கள், 6.20 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

இதுகுறித்து காவல்துறை தரப்பில் விசாரித்தபோது, ''கள்ளநோட்டு கும்பல் தலைவன் பிரதீப், சேலத்தில் தங்கி ஆரம்பத்தில் சின்னச்சின்ன அளவில் கள்ள நோட்டுகளை மாற்றி வந்துள்ளான். இதில் மயங்கும் ஆள்களிடம் பெரிய அளவில் நல்ல ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக்கொண்டு, அதற்கு ஈடாக இரு மடங்கு கள்ளப்பணத்தை கைமாற்றி வந்துள்ளான். இந்த கும்பலுக்கு இன்னும் யார் யாருடன் தொடர்பு இருக்கிறது என்பதையும் விசாரித்து வருகிறோம்,'' என்றனர்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.