Skip to main content

அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணிக்கு மக்கள் கடும் எதிர்ப்பு! 

Published on 14/06/2025 | Edited on 14/06/2025

 

People are opposed work  measuring lands belonging Department Charities

தமிழ்நாடு முழுவதும்  கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை  கண்டறிந்து ஆவணப்படுத்தவும் வரன்முறை செய்யவும் அறநிலையத்துறை உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து  தூத்துக்குடி மண்டல இணை ஆணையர் உத்தரவின்படி ஆலய நிலங்களுக்கான தனி தாசில்தார் பிரபாகர், வழக்கறிஞர் கோபிநாத், கோவில் செயல் அலுவலர்கள் வெள்ளைச்சாமி, தமிழ் செல்வி, கோவல மணிகண்டன், ராதா, உமா மகேஸ்வரி,  கோயில் ஆய்வாளர்கள் சிவகலை பிரியா, முப்பிடாதி, ருக்மணி, ஆனந்தராஜ் , தனு சூர்யா மற்றும் தென்காசி தூத்துக்குடி சர்வேயர்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் பகுதியில் நேற்று முன்தினம்( ஜூன் 12) நண்பகலில் ரோவர் கருவியுடன்  நில அளவீடு மற்றும் குடியிருப்போரின் விவரங்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அப்பகுதி மக்கள் தங்களுக்கு பட்டா வழங்குவதற்கு தான் வருவாய் துறை சார்பில் அளவீடு செய்யும் பணி நடக்கிறது என முதலில் நினைத்துள்ளனர். பின்னர் சிறிது நேரம் கழித்து தான் அறநிலையத்துறை அதிகாரிகள் நிலங்களை அளவீடு செய்து கோயில் பெயரில் ஆவணப்படுத்துகிறார்கள் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த  திமுக கவுன்சிலர்கள் முத்துலட்சுமி பூல்பாண்டி, கருப்பசாமி என்ற முத்துப்பாண்டி மற்றும் சின்னராசு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நபர்கள்  திரண்டு வந்து அளவீடு செய்யும் பணிகளை தடுத்து நிறுத்தி  எதிர்ப்பு தெரிவித்தனர்.

People are opposed work  measuring lands belonging Department Charities

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோவில்பட்டி நகராட்சி சேர்மன் கருணாநிதி, சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு விடும் என தெரிவித்து அதிகாரிகளை அங்கிருந்து உடனடியாக கிளம்ப வலியுறுத்தினார். ஆனால் அறநிலையத்துறை அதிகாரிகள் அங்கேயே இருந்ததால் அசாதாரண சூழல் உருவானது. மேலும் நில அளவீடு செய்யும் பணியும் பாதியிலேயே தடைபட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல் பாண்டி மற்றும் போலீஸ் டீம் விரைந்து வந்து அறநிலையத்துறை அதிகாரிகளை  அங்கிருந்து பத்திரமாக மீட்டு வீரவாஞ்சி நகர்  புறக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஸ்ரீ சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயிலுக்கு சொந்தமாக வீரவாஞ்சி நகர் பகுதியில் 129 ஏக்கர் 35 சென்ட் நிலங்கள் உள்ளதாகவும்,  அந்த நிலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருப்புகள் கட்டி கடந்த 40 வருடங்களாக குடியிருந்து வருகின்றனர். எனவே கோயில் நிலத்தை ஆவணப்படுத்தி வரைமுறை செய்யவே அளவீடு பணிகள் நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.  இருப்பினும் அப்பகுதியில் அசாதாரண சூழல் நிலவியதால் தொடர்ந்து பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உருவானது.

இந்நிலையில் கோயில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் ஆஜராகி புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், வீரவாஞ்சி நகர் பகுதியில் ஜூன் 12 ஆம் தேதி நண்பகல் 12 மணியளவில், கவுன்சிலர்கள் முத்துலட்சுமி பூல்பாண்டி, கருப்பசாமி என்ற முத்துப்பாண்டி மற்றும் சின்னராசு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நபர்கள்  கூட்டமாக திரண்டு வந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வந்த நில அளவீடு செய்யும் பணிகளை தடுத்து நிறுத்தி  எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் மத்தியில் கிளர்ச்சியை தூண்டும் விதமாக பொது அமைதிக்கு விரோதமாக நில அளவீடு பணியினை செய்யவிடாமல் தடுத்து கட்டாயமாக வெளியேற்றினார்கள். மேற்படி நபர்களின் செயலினால் அரசு பணி தொடர்ந்து நடைபெறாமல் தடுக்கப்பட்டு விட்டது. எனவே மேற்படி நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து அரசு பணி தொடர்ந்து நடைபெறுவதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு தெரிவித்துள்ளார்.

People are opposed work  measuring lands belonging Department Charities

இரண்டு திமுக கவுன்சிலர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நபர்கள் மீது  கோயில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்திருப்பதும், அரசியல் தலையீடு மற்றும் மக்கள் எதிர்ப்பினால் அறநிலையத்துறை அதிகாரிகள் பணிகளை செய்ய முடியாமல் தடைப்பட்டு இருப்பதும் அறநிலையத்துறை வட்டாரத்தில்  சர்ச்சையையும் சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இதனிடைய அப்பகுதி மக்கள் நம்மிடம் கூறுகையில், வீரவாஞ்சி நகர் பகுதியில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை கட்டி கடந்த 40 வருடங்களாக  குடியிருந்து வருகிறோம். நகராட்சியின் இரண்டு வார்டுகள் இப்பகுதியில் உள்ளது.‌   கோவில்பட்டி நகராட்சி சார்பில் குடியிருப்புகளுக்கு வரிவசூல் செய்யப்படுகிறது. அரசின் பல்வேறு துறைகள் சார்பில் மின் இணைப்பு வசதி, தார் சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள்  ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன. பட்டா கேட்டு வருடக்கணக்கில் போராடி வருகிறோம். எனவே எங்களுக்கு முதலில் பட்டா கொடுப்பதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி

சார்ந்த செய்திகள்