நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
இந்நிலையில் தேனி மாவட்டம் லட்சுமிபுரம் பகுதியில் தேனியில் திமுக சார்பில் போட்டியிடும் தங்கத்தமிழ்செல்வன் மற்றும் திண்டுக்கல்லில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோரை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது கூட்டத்தில் அவர் பேசுகையில், ''அதிமுகவை அழிக்கவெளியில் இருந்து ஆட்கள் வர வேண்டியதில்லை. இபிஎஸ், ஓபிஎஸ், தினகரனே போதும். பிரதமர்களை உருவாக்கும் இயக்கமே திராவிட முன்னேற்ற கழகம். தமிழ்நாட்டை மதிக்கும் மத்திய அரசு வேண்டும். கடந்த முறை தோற்ற தேனியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் இந்த முறை வெல்ல வேண்டும். பாஜகவுடன் கூட்டணி இருந்த அதிமுகவினர் தங்களை ஊழல் வழக்கில் விடுவிக்க வேண்டும் என்று கேட்டனர். ஆனால் மத்தியில் கூட்டணியில் இருந்த போதெல்லாம் திமுக பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளது.
பிரதமர் கனவில் தான் இருப்பதாக சொல்லும் இபிஎஸ் என்ன கனவில் உள்ளார்? ஒவ்வொரு ஆண்டும் பயிர் சாகுபடி கொள்முதலில் சாதனை செய்கிறோம். வேளாண் துறை சார்பில் கண்காட்சி, திருவிழா ஆகியவற்றை செய்து மக்கள் மனதில் நம்பிக்கையை விதைக்கிறோம். மண்ணும் செழிக்கிறது மக்களும் செழிக்கிறார்கள். இதுதான் திராவிட ஆட்சி. உழவர்களுக்கு துரோகம் செய்த மாதிரி குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்து சிறுபான்மை மக்களுக்கு துரோகம் செய்தார் எடப்பாடி பழனிச்சாமி. இன்று திண்டுக்கல்லில் சிறுபான்மை மக்களைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
அதிமுகவும் பாமகவும் அன்று குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து வாக்களிக்காமல் இருந்திருந்தால் அந்த சட்டமே நிறைவேறி இருக்காது. இந்த துரோகத்தை மனதார செய்த கட்சிகள் தான் அதிமுகவும் பாமகவும். இந்த சட்டங்களை ஆதரித்து ஓட்டு போட்ட பாமக பாஜகவுடன் அமைத்து இருப்பது சந்தர்ப்பவாத கூட்டணி. ராமதாஸ் நிலையை பார்த்து அவர்கள் கட்சிக்காரர்களே தலை குனிந்து நிற்கிறார்கள். இதற்கு மேல் அவரை நான் விமர்சிக்க விரும்பவில்லை. தேனி தொகுதியில் பாஜக ஆதரவில் டி.டி.வி.தினகரன் நிற்கிறார். இதே தினகரன் என்ன சொல்லியிருந்தார் 'பாஜகவில் சேர்வது தற்கொலைக்கு சமம்; யாராவது தெரிந்தே கிணற்றில் விழுவாங்களா?' என கேட்டவர். இப்பொழுது என்ன 'தெரிந்தே கிணற்றில் விழ வந்திருக்கிறாரா?' அதுதான் இப்பொழுது தேனிக்காரங்க கேட்க வேண்டிய கேள்வி''என்றார்.