Skip to main content

பகுதிநேர அனைத்து ஆசிரியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி முதல்வருக்கு கருணை மனு!

Published on 03/03/2020 | Edited on 03/03/2020

தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், பகுதிநேர அனைத்து ஆசிரியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு கருணை மனு அனுப்பியுள்ளார்.

 

part time teachers request to govt

 



அந்த மனுவில், "தமிழ்நாடு சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டு 2012-ம் ஆண்டு 16549 பகுதிநேர ஆசிரியர்கள் ரூ.5ஆயிரம்  தொகுப்பூதியத்தில் உடற்கல்வி, ஓவியம், கணினி தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன், கல்வி பாடங்களை நடத்திட அனைவருக்கும் கல்வி இயக்க(சமக்ர சிக் ஷா) நிதியை பெற்று பள்ளிக்கல்வித்துறை மூலம் நியமனம் செய்யப்பட்டோம்.

கடந்த 8 ஆண்டுகளில் ரூ.2700 மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் 9-வது ஆண்டாக பணிபுரியும் எங்களுக்கு தற்போது தரப்படும் சம்பளம் ரூ.7700. இது தினக்கூலியைவிட குறைவானது. வருடாந்திர சம்பள உயர்வு 10 சதவீதம் தரப்பட்டிருந்தால் சம்பளம் ரூ.10 ஆயிரம் எப்போதே கிடைத்திருக்கும். 16549 பேரில் 5 ஆயிரம் காலிப்பணியிடங்களின் நிதியை தற்போது பணிபுரிந்து வரும் 12ஆயிரம் பேருக்கு பகிர்ந்து வழங்கினாலே ரூ.11ஆயிரம் வரை வழங்கமுடியும்.இதனுடன் 7-வது ஊதியக்குழு 30 சதவீதம் ஊதியஉயர்வை அமுல்செய்தால் ரூ.15ஆயிரம் வரை அரசு வழங்க வழி இருக்கிறது. எனவே விலைவாசி உயர்வுக்கேற்ப எங்களுக்கு சம்பள உயர்வைதர அரசு முன்வரவேண்டும்.

9 ஆண்டுகளாக பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யாததால் அரசின் பணபலன்களை பெறமுடியாமலும், போனஸ், வருங்கால வைப்பு நிதி, மருத்துவ காப்பீடு, பணி ஓய்வு மற்றும் இறந்துபோன பகுதிநேர ஆசிரியர்களின் குடும்பங்களுக்கு குடும்ப நலநிதி எதுவும் கிடைக்காமலும் வாழ்வாதாரத்தை இழந்து வருகிறோம். இவ்வாறு அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து செந்தில்குமார் கூறுகையில், "10-வது கல்வியாண்டு தொடங்கவுள்ள நிலையில் எங்களை பணிநிரந்தரம் செய்யாததால், மே மாதம் சம்பளம் இதுவரை 8 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வருவதால் அனைவருக்கும் ரூ.53 ஆயிரம் வரை இழந்து தவித்து வருகிறோம். எங்களுக்கான பணிநியமன ஆணையில் மே மாதம் சம்பளம் கிடையாது என குறிப்பிடாத நிலையில் இதுபோன்ற நடவடிக்கை எங்களை மேலும் பாதிக்கிறது.

வேலைநிறுத்த காலங்களில் அரசின் உத்தரவின்படி ஊதியம் எதுவுமின்றி முழுநேரமும் பள்ளிகளை திறந்து பாடம் நடத்திய பகுதிநேர ஆசிரியர்களுக்கு அரசு சலுகைகளை செய்ய முன்வரவேண்டும் என எதிர்பார்த்து வருகிறோம். நாங்கள் நியமனம் செய்யப்பட்டதோடு 2-வது முறையாக ஆட்சி செய்யும் அதிமுக அரசின் பட்ஜெட்டில் இதுவரை ஒருமுறைகூட பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பளஉயர்வு மற்றும் பணிநிரந்தரம் குறித்து அறிவிப்புகள் வெளியிடாதது எங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்துகிறது.

ஒன்று எங்களை பணிநிரந்தரம் செய்யுங்கள். இல்லையெனில் ரூ.18ஆயிரம் குறைந்தபட்ச சம்பளத்தை கொடுங்கள் என்ற இரட்டை கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். 3 ஆண்டுக்குமேல் பணிபுரிந்த 16ஆயிரம் துப்புரவு பணியாளர்களை சிறப்பு காலமுறையில் பணியமர்த்துகிறது அரசு. எனவே 9 ஆண்டுகளாக பாடம் நடத்தும் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களைய காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த முன்வரவேண்டும். தற்போது எங்களுக்கு ரூ.7ஆயிரத்து 700 சம்பளம் தர அரசு ஆண்டுக்கு ரூ.100 கோடி செலவிடுகிறது. எங்களை இடைநிலை ஆசிரியர்கள் நிலையில் பணியமர்த்தினால் அரசு மேலும் ரூ.300கோடி நிதி ஒதுக்கினோலே போதும்.

எனவே இம்முறையாவது பட்ஜெட்டில் 110-ன் கீழ் முதல்வர் அறிவிப்பு வெளியிட வலியுறுத்தி கேட்டுவருகிறோம். தமிழகம் முழுவதும் இருந்து பகுதிநேர ஆசிரியர்கள் கவர்னர் முதல்வர் துணைமுதல்வர் பள்ளிக்கல்வி அமைச்சர் பணியாளர் நிர்வாக சீர்திருத்ததுறை அமைச்சர் பள்ளிக்கல்வி செயலாளர் ஆணையர் மாநில திட்ட இயக்குனர் ஊதியக்குறை தீர்க்கும் குழுதலைவர் மற்றும் சட்டசபை மனுக்கள் குழுதலைவர்  என 10 பேருக்கு கருணை மனுக்களை அனுப்பி வருகின்றனர். எனவே அரசு கருணையுடன் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்ற புதிய அரசாணை பிறப்பித்து உதவிட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்