வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பஞ்சாயத்து உட்பட்ட பஜார் வீதியைச் சேர்ந்தவர்கள் ஹரி நாராயணன், சரவணன், அசோக் குமார், அருண்குமார் இவர்கள் தங்களது குடும்பத்தினருடன் வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து டிசம்பர் ஒன்றாம் தேதி புகார் மனு ஒன்றைத் தந்துள்ளனர்.
அந்தப் புகார் மனுவில், அணைக்கட்டு அருகே உள்ள ஏரிபுதூர் என்கிற கிராமத்தில் 1994 ஆம் ஆண்டு ராமகிருஷ்ணன் என்பவரிடமிருந்து எங்கள் அப்பா 7. 45 ஏக்கர் நிலம் வாங்கினார். அது இப்போது எங்கள் பெயரில் உள்ளது. அந்த நிலம் எங்களுக்குச் சொந்தமானது எனச் சொல்லி 25 ஆண்டுகளுக்குப் பிறகு திமுகவைச் சேர்ந்த அணைக்கட்டு ஒன்றியத்தின் மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் பிரச்சனை செய்கிறார். ராமகிருஷ்ணனுக்கு வாரிசு கிடையாது. அவரை ஏமாற்றி வாங்கினீர்கள்; அவர் விற்றது செல்லாது எனச்சொல்லி அவரது தம்பி பத்மநாபன் பிரச்சனை செய்தார். இந்த இடம் எங்களுக்கே சொந்தம் என மாவட்ட நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார் ஒ.செ வெங்கடேசனின் தந்தை பத்மநாபன். அந்த வழக்கில் நாங்கள் வெற்றி பெற்றோம்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு ஒ.செ பதவியில் இருப்பதால் ஆளும்கட்சி என அதிகாரத்தோடு அடிக்கடி பிரச்சனை செய்கிறார். நிலத்தில் ஆட்களோடு வந்து புகுந்து மண் அள்ளினார். அங்கிருந்த எங்களுக்குச் சொந்தமான வீட்டையும் இடித்து நாசம் செய்தார். இதைக் கேள்வி கேட்ட எங்கள் அக்கா கவிதாவின் தாலியை அறுத்துவிட்டார். இது குறித்து புகார் அளித்தால் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை அதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளோம் எனக் கூறினர்.
இதுகுறித்து அணைக்கட்டு மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசனிடம் நாம் கேட்டபொழுது, எங்களுடைய பெரியப்பா அந்த நிலத்தை எங்கள் பெயரில் உயில் எழுதியுள்ளார். அது இப்போதுதான் எங்களுக்குத் தெரிந்து, அது கிடைத்தது. அதனால் அந்த இடத்துக்குச் சென்றேன், அவர்கள் தகராறு செய்தார்கள். இதை வீணாக என் அரசியல் எதிரிகள் பிரச்சனை செய்கிறார்கள். காவல்துறை விசாரணையில் இருதரப்பையும் நீதிமன்றத்துக்கு போகச்சொல்லியுள்ளார்கள். அதுவரை யாரும் நிலத்தில் யாரும் நுழையக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்கள் என்கிறார்.