Skip to main content

ஜாதியை சொல்லி திட்டியதால் பினாயில் குடித்த மாணவிகள் - ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர் புகார்

Published on 16/02/2023 | Edited on 16/02/2023

 

Parents file complaint against student-teacher who drank pinay for insulting students by caste

 

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரால் நடத்தப்பட்டு வருகிறது. இதில் செம்பட்டி சாலையில் உள்ள பெண்கள் உயர்நிலை பள்ளியில் தொப்பம்பட்டியை சேர்ந்த பிச்சைமுத்து என்பவரின் மகள் பிருந்தா 9வது வகுப்பு படித்து வந்துள்ளார். இதுபோல அப்பள்ளியில் கீர்த்தனா என்ற மாணவியும் படித்து வந்துள்ளார். இந்த இரண்டு மாணவிகளும் பள்ளி வாகனத்தில் பள்ளிக்கு வருவதாகக் கூறப்படுகிறது. பள்ளியில் கணித ஆசிரியையாக இருக்கும் பிரேமலதா என்பவர் மாணவி பிருந்தா மற்றும் கீர்த்தனாவை மாணவிகள் மத்தியில் நிற்க வைத்து மாணவிகளின் ஜாதியை சொல்லி திட்டியதாகவும் கூறப்படுகிறது. மேலும் மாணவியரிடம் யாரும் பழக்கவழக்கம் வைத்துக்கொள்ள வேண்டாம் என்றும் மாணவிகளுக்கு பள்ளி வாகனத்தில் இருக்கையில் அமர வைக்கக் கூடாது என்றும் கூறியதாக மாணவியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், கடந்த 15ம் தேதி ஆசிரியை பிரேமலதா மாணவிகளை கடும் சொல்லால் திட்டியதால் மாணவிகள் இருவரும் பள்ளியின் கழிப்பறையில் வைக்கப்பட்டிருந்த பினாயிலை குடித்துள்ளனர். இதைப் பார்த்த மாணவிகள் உடனடியாக பள்ளி நிர்வாகத்திடம் தெரிவிக்கவே, மாணவிகளை உடனடியாக சின்னாளபட்டியில் உள்ள அரசு சமுதாயநல மையத்திற்கு கொண்டுசென்று முதலுதவி அளித்த பின்பு திண்டுக்கல்லில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மாணவிகள் இருவரும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் நீதிபதி மருத்துவமனைக்கு சென்ற மாணவிகளிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இந்த விஷயம் ஈரோடு தேர்தல் பிரசாரத்திலிருந்த ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தெரியவே உடனே மருத்துவமனை டீனை தொடர்பு கொண்டு மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

 

Parents file complaint against student-teacher who drank pinay for insulting students by caste

 

அதன்பின்னர் நேற்று காலை 8 மணியளவில் தொப்பம்பட்டிக்கு மாணவிகளை அழைத்துவர வந்த பள்ளி வாகனத்தை சிறைபிடித்த தொப்பம்பட்டி கிராம மக்கள் மாணவிகளை ஜாதியை சொல்லி திட்டிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று போராட்டம் நடத்தியுள்ளனர். அதன் பின்னர் தொப்பம்பட்டியை சேர்ந்த ஊர் முக்கிய பிரமுகர்கள் பேச்சுவார்த்தை நடத்தி பள்ளி வாகனத்தை விடுவிக்க செய்தனர். அதன்பின்னர் கிராம மக்கள் நேரடியாக சின்னாளபட்டி காவல்நிலையத்திற்கு வந்து முற்றுகையிட்டதோடு ஆசிரியை பிரேமலதா மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோஷமிட்டனர். மாணவியின் தாயார் முனீஸ்வரி சின்னாளபட்டி காவல்நிலையத்தில் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்ககோரி புகார் மனு அளித்தார். அதன்பின்பு சின்னாளபட்டி காவல்நிலையத்திற்கு வந்த மாவட்ட எஸ்.பி.பாஸ்கரன், காவல்துறை கண்காணிப்பாளர்கள் இமானுவேல் ராஜ்குமார், ராஜாமுரளி, உதயகுமார் ஆகியோர் முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர்.

 

Parents file complaint against student-teacher who drank pinay for insulting students by caste

 

அதைத் தொடர்ந்து கோட்டாட்சியர் சந்தோஷ், வட்டாட்சியர் சரவணன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார், நன்னடத்தை அலுவலர்கள் சேமலா, சரஸ்வதி, ஆகியோர் செம்பட்டி சாலையில் உள்ள பள்ளிக்கு சென்று பள்ளி தலைமையாசிரியர் மற்றும் புகார் செய்யப்பட்ட ஆசிரியையிடம் 2 மணிநேரம் விசாரணை செய்த பின்பு பள்ளிக்கு மாணவியை வரவழைத்து விசாரணை செய்து வாக்குமூலம் பெற்றனர். இதுகுறித்து கேள்விப்பட்டவுடன் காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் பள்ளிக்கும் வந்து முற்றுகையிட்டு மறியலிலும் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர். அதன் பின்னரும் காவல்துறையினர் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், ஆசிரியைக்கு சாதகமாக செயல்படுவதாகவும் கூறி மீண்டும் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்தியில் பேசிய காவல் துணை கண்காணிப்பாளர்கள் இமானுவேல் ராஜ்குமார், ராஜா முரளி, உதயகுமார் ஆகியோர் முறைப்படி நடவடிக்கை எடுப்பதற்காக நாங்கள் தயாராக உள்ளோம். பள்ளி நிர்வாகத்திடம் ஒப்புதல் பெற்ற பின்பு வழக்குப் பதிவு செய்வோம் எனக் கூறியதை அடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

 

Parents file complaint against student-teacher who drank pinay for insulting students by caste

 

இந்த நிலையில், பிரச்சனைக்குரிய ஆசிரியை பிரேமலதாவை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்வதாக காவல் நிலையத்திற்கு கடிதம் கொடுத்ததை அடுத்து விசாரணையை போலீஸார் துரிதப்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து பள்ளி மாணவியின் தாயார் முனீஸ்வரி கூறுகையில், ''பட்டியலின பெண்ணை ஜாதியை சொல்லி திட்டிய ஆசிரியர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஏற்கனவே இந்த ஆசிரியையால் வீரக்கல்லை சேர்ந்த ஒருமாணவி கிணற்றில் குறித்து கைகால்கள் முறிந்த நிலையில் உள்ளார். தொடர்ந்து இந்த பள்ளியில் ஜாதிய வன்மத்துடன் ஆசிரியைகள் நடந்து கொள்வதால் மனித உரிமை ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

 

இது பற்றி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த மாநில செய்தித் தொடர்பாளர் ரெங்கராஜன் கூறுகையில், ''சமூக நீதியுடன் செயல்படும் இந்த பள்ளிகளில் தற்போது ஜாதிவெறியுடன் செயல்படும் சில ஆசிரியைகளால் பள்ளிக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம் தயவு தாட்சண்யம் இல்லாமல் ஆசிரியை மீது நடவடிக்கை எடுத்து அரசுப் பள்ளிகளுக்கு அவர்களை அனுப்ப வேண்டும். பள்ளியில் படிக்கும் தாழ்த்தப்பட்ட சமுதாய மாணவிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று கூறினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.