Skip to main content

“அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை” - ஊராட்சி மன்றத் தலைவர் தீக்குளிக்க முயற்சி

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

Panchayat president attempted to lost their life Bhuvanagiri union office

 

புவனகிரி அருகே ஊராட்சியில், ஊராட்சி செயலர் நிதி முறைகேடு செய்தது தொடர்பாகப் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத பீ.டி.ஓ., வை கண்டித்து ஊராட்சி மன்றத் தலைவர் தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

கடலூர் மாவட்டம், மேல்புவனகிரி ஒன்றியம், தெற்குத்திட்டை ஊராட்சியில் தலைவராக ராஜேஸ்வரி, துணைத் தலைவராக மோகன்ராஜ், ஊராட்சி செயலராக சசிக்குமார் நிர்வாகத்தில் உள்ளனர். ஊராட்சியில் நிதி முறைகேட்டை தடுக்கவும், வெளிப்படைத் தன்மைக்காக பல்வேறு மாற்றங்களை அரசு மேற்கொண்டுள்ளது. இதில் செலவினங்களுக்கு தலைவர் மற்றும் துணைத் தலைவர் செல்போனுக்கு வரும் ஓ.டீ.பி., எண் மூலம் நிதி ஒதுக்கீட்டு உறுதி செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த ஊராட்சியில் சமீபத்தில் ஊராட்சி செயலர் தன்னிச்சையாக குறிப்பிட்ட தொகையை முறைகேடு செய்துள்ளதாக ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி கேட்டதால் தலைவர் மற்றும் செயலருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

 

இருவரும் ஒருமையில் பேசிக்கொண்டு ஆவேசமாகத் திட்டிக் கொண்டுள்ளனர். இதில் தன்னை ‘செருப்பால் அடிப்பேன் என ஊராட்சி செயலர் திட்டியது குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவும், முறைகேடு செய்த பணத்தை மீட்டு ஊராட்சி கணக்கில் வரவு வைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்துள்ளார்.

 

மனுவைப் பெற்ற அதிகாரி நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தன்னை அலட்சியம் செய்வதை கண்டித்தும், சம்பந்தப்பட்ட செயலரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என வெள்ளிக்கிழமை ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி ஒன்றிய அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் பெட்ரோல் பாட்டிலை பிடுங்கி சமரசம் செய்தனர். இதனால் அப்பகுதி  மிகுந்த பரபரப்பாகக் காணப்பட்டது.

 

இதுகுறித்து புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், வெள்ளிக்கிழமைதான் இவர்கள் அலுவலகத்திற்கு வந்து மனு புகார் கூறினார்கள். இதனை எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுங்கள் எனக் கூறினேன், பின்னர் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இதுபோன்று நடந்து கொண்டார். உடனடியாக அவரை சமாதானம் செய்து அனுப்பி வைக்கப்பட்டது. ஊராட்சி செயலாளர் தவறு ஏதும் செய்யவில்லை என்றும் 2 பில் ஊராட்சி தலைவரின் அனுமதியோடுதான் போட்டதாகக் கூறுகிறார். மேலும் விசாரணையில்தான் தெரிய வரும் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.