Skip to main content

நெல் கொள்முதல் செய்ய விவசாயியிடம் லஞ்சம் பெற்ற ஊழியர் கைது

Published on 24/02/2023 | Edited on 24/02/2023

 

Paddy procurement employee arrested for taking bribe from farmer

 

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகில் சாத்தமங்கலம் கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் ரகுமான் என்பவர் எழுத்தராகவும் தியாகராஜன் என்பவர் லாரிக்கு லோடு ஏற்றும் தலைமை தொழிலாளியாகவும் வேலை செய்து வருகிறார்கள். இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் அப்பகுதியைச் சுற்றிலும் உள்ள கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில் பூதங்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முகுந்தன் என்பவர் தனது வயலில் அறுவடை செய்த சுமார் 450 மூட்டை நெல்லை விற்பனை செய்வதற்காக மேற்படி சாத்தமங்கலம் நெல் கொள்முதல் நிலையத்திற்கு விற்பனைக்கு எடுத்துச் சென்றுள்ளார். எடை போட்டு லாரிக்கு லோடு ஏற்றும் தலைமை தொழிலாளி தியாகராஜன் எழுத்தர் ரகுமான் இருவரும் எடை போடுவதற்கு ஒரு மூட்டை ஒன்றுக்கு 55 ரூபாய் வீதம் மொத்தம் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என்று எழுத்தர் ரகுமானும் லோடு மேன் தியாகராஜனும் கேட்டுள்ளனர். தான் மழையிலும் வெயிலிலும் கடுமையாக உழைத்து விளைய வைத்த நெல்லை அரசு கொள்முதல் செய்வதற்கு இவர்களுக்கு ஏன் கமிஷனாக 25 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று கோபமடைந்த முகுந்தன் இது குறித்து கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளார்.

 

அவரது புகாரை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் முகுந்தனிடம் ரசாயனம் தடவப்பட்ட லஞ்ச பணம் 25 ஆயிரம் ரூபாயை சம்பந்தப்பட்டவர்களிடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர். அதன்படி நேற்று லஞ்சப் பணத்தை எடுத்துக்கொண்டு கொள்முதல் நிலையத்திற்குச் சென்ற முகுந்தன்., தலைமை லோடுமேன் தியாகராஜனிடம் அந்த பணத்தை வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன், இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் தியாகராஜனை கையும் களவுமாகப் பிடித்தனர். கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக எழுத்தர் ரகுமானும் லோடுமேன் தியாகராஜன் இருவரையும் கைது செய்த போலீசார் சிதம்பரம் வேளாண் மண்டல அலுவலகத்தில் வைத்து அவர்கள் இருவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். பின்பு கைது செய்யப்பட்டு அவர்கள் இருவரையும் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.