Skip to main content

பி.டி.லீ. செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை அறங்காவலர்கள் நியமனத்துக்கு எதிரான வழக்கு! – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

Published on 28/12/2020 | Edited on 28/12/2020

 

high court chennai


பி.டி.லீ. செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளைக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பி.டி.லீ. செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை அறங்காவலர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்கக் கோரி, அறக்கட்டளை சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தை நிராகரித்த சென்னை உயர் நீதிமன்றம், வன்னியகுல சத்திரிய பொது அறக்கட்டளை சட்டப்படி அமைக்கப்பட்ட வாரியத்தின் மூலம், நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.


மேலும், நீதிமன்ற உத்தரவின்படி அறக்கட்டளை அறங்காவலர்கள் பதவிக்கு 203 பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதிலிருந்து அறங்காவலர்களாக நியமிக்கப்பட்ட இருவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், தகுதியில்லாதவர்கள் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, 2008 முதல் 2011 வரை அறங்காவலராகப் பதவி வகித்த முரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.


அவர் தனது மனுவில், வாரியத்திடம் கலந்தாலோசித்து, அறங்காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனச் சட்டத்தில் கூறியுள்ள போதும், எந்தக் கலந்தாலோசனையும் நடத்தாமல் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், அறங்காவலர்கள் பதவிக்காகப் பெறப்பட்ட விண்ணப்பங்களை உயர் நீதிமன்றத்துக்கு மீண்டும் அனுப்பிவைத்து, உயர் நீதிமன்றமே அறங்காவலர்களை நியமிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.


 இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆஷா, ஜனவரி 19 -ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்