தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தீவிர நடவடிக்கைகள் எடுக்கும்படி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கைகள் எடுத்துவருகிறார்.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் 1,500 கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்நிலையில், நேற்று (16.05.2021) பிற்பகல் மூன்று மணிக்கு அரசு மருத்துவமனைக்கு வர வேண்டிய ஆக்சிஜன் டேங்கர் லாரி, இரவு பத்து மணி வரையிலும் வரவில்லை. இதனால் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவானது. இதுகுறித்து தகவலறிந்த பி. மூர்த்தி, இரவில் அரசு மருத்துவமனைக்குச் சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் ஆக்சிஜன் டேங்கர் லாரி வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டதன் நிலை குறித்து கேட்டறிந்த அவர், மதுரை தனியார் ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனத்திற்கு உடனடியாக சென்று அங்கிருந்து ஆக்சிஜன் அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்தார். மேலும், நள்ளிரவு 2 மணிக்கு ஆக்சிஜன் டேங்கர் லாரி வந்த பின்னரே அமைச்சர் பி. மூர்த்தி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.