Skip to main content

திமுக பொங்கலுக்கு கொடுத்த அரிசியை மாடு கூட சாப்பிட மறுக்கிறது - ஓபிஎஸ்

Published on 10/02/2022 | Edited on 10/02/2022

 

jlk


வருகின்ற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திண்டுக்கல்லில் அதிமுக கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விசுவநாதன் தலைமையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் கழகம் சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

 
                       
இதில் கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா. விசுவநாதன் பேசுகையில், "ஸ்டாலின் வாராரு விடியல் தரப் போகிறார் என சொல்லி எந்த மக்களுக்கும் விடியல் தராமல் 9 மாத ஆட்சியில் எந்த சாதனையும் செய்யவில்லை. திமுகவினர் எதை சொல்லி வாக்கு கேட்பார்கள். தற்போது சட்டமன்ற தேர்தல் வந்தால் அதிமுக 234 தொகுதியில், அதிமுக மட்டும் 200 தொகுதியில் மாபெரும் வெற்றி பெறும் என பேசினார். 

 

அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, "தமிழகத்தின் முதல்வர் காணொளி மூலம் பரப்புரை செய்து வருகிறார். மக்களை சந்தித்தால் கேள்வி கேட்பார்கள் என்று காணொளி மூலம் பரப்புரை செய்து வருகிறார் முதல்வர். சொன்ன வாக்குறுதிகளை திமுக செய்யவில்லை. எந்த வேலையும் செய்யாமால் மக்களை ஏமாற்றி வருகிறார். ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதில்லை, 9 மாத கால ஆட்சியில் ஊழல், லஞ்சம் தான் அதிகரித்துள்ளது. அதிமுக வெற்றியை யாரும் தடுக்க முடியாது. 9 மாத கால ஆட்சியில் திமுக கேவலத்தை தான் சந்தித்துள்ளது" என்று கூறினார்.


                     
அதனைத் தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஒ. பன்னீர்செல்வம் பேசும்போது, "திண்டுக்கல் மாவட்டம் ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளது. அதிமுகவிற்கு அச்சாரமாக விளங்கியது திண்டுக்கல். அதிமுக ஆட்சி மக்களாட்சியாக உருவாக்கியது ஜெயலலிதா ஆட்சி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் 100க்கு 100 வாக்குறுதிகள் நிறைவேற்றிய அரசு அதிமுக அரசு தான். தாலிக்கு தங்கம் திட்டத்தை 4 கிராமில் இருந்து 8 கிராமாக உயர்த்தியது ஜெயலலிதா தான். திருமண உதவி தொகையை 12000 ஆக இருந்ததை 18000 ஆக உயர்த்தியது எடப்பாடி பழனிச்சாமி அரசு. அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசு தரமாக கொடுக்கபட்டது, திமுக ஆட்சியில் பொங்கல் பரிசு தரமாக வழங்கவில்லை, திமுக பொங்கல் பரிசாக  வழங்கிய அரிசியை மாடு கூட சாப்பிட மறுக்கிறது, திமுகவுக்கு மக்களை பற்றி கவலை இல்லை. நீட் தேர்வில் தமிழக முதல்வர் மாயா ஜாலம் செய்து பார்க்கிறார். அவரால் எதுவும் செய்ய முடியவில்லை, உள்ளாட்சித் தேர்தலில் திமுகவிற்க்கு மக்கள் சரியான பாடம் புகட்ட உள்ளார்கள்" என்றார்.
 

 

 

சார்ந்த செய்திகள்