![The youth entered the sanctum sanctorum of the temple with a sickle; Shocked at the trial](http://image.nakkheeran.in/cdn/farfuture/NRnhXoCbC4kS9Aas9ymOloC_Sz_yPlASS8ckmhcliCk/1709363818/sites/default/files/inline-images/a5193.jpg)
அரிவாளுடன் இளைஞர் ஒருவர் கோவில் கருவறைக்குள் நுழைந்து கொண்டு வெளியே வராமல் போக்கு காட்டிய சம்பவம் புதுக்கோட்டையில் நிகழ்ந்துள்ளது.
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே ஆஞ்சநேயர் கோவில் ஒன்று அமைந்துள்ளது. அந்த பகுதியில் மிகவும் பிரபல கோவிலாக இருப்பதால் அதிகப்படியான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் திடீரென இளைஞர் ஒருவர் கோவிலின் கருவறைக்குள் அரிவாளுடன் சென்றுள்ளார். பொதுமக்கள் வெளியே வர சொல்லியும் அந்த இளைஞர் கருவறையை விட்டு வெளியே வரவில்லை.
இதனால் பக்தர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக கோவிலுக்கு வந்த போலீசார், அந்த இளைஞரை வெளியே கொண்டு வர முயற்சித்தும் அந்த இளைஞர் வர மறுத்தார். மேலும் கையில் இருந்த அரிவாளை காட்டி போலீசாருக்கு மிரட்டல் விடுத்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறையினரின் உதவி நாடப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் அவர் மீது தண்ணீரை பீச்சி அடித்து அவரை வெளியே கொண்டுவர முயற்சி செய்தனர்.
![The youth entered the sanctum sanctorum of the temple with a sickle; Shocked at the trial](http://image.nakkheeran.in/cdn/farfuture/OJaOedp-X1eJwYIRjqoreDFuGml94cLXZJ41wrjltcw/1709363836/sites/default/files/inline-images/a5194.jpg)
பின்னர் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி அந்த இளைஞர் வெளியே கொண்டுவரப்பட்டார். நடத்தப்பட்ட விசாரணையில் அந்த இளைஞர் புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட அசோக் நகர் பகுதியை சேர்ந்த வினோத் என்பதும், காதல் விவகாரத்தால் ஆஞ்சநேயர் கோவிலின் கருவறைக்குள் சென்றதும் தெரியவந்தது. தொடர் முயற்சிகளுக்குப் பிறகு கைகளை துணியால் கட்டி வெளியே கொண்டு வரப்பட்ட அந்த இளைஞர் ஆட்டோவில் ஏற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.