உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த ஓபிஎஸ் மேல்முறையீடு செய்த மனு நீதிபதிகளால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தார்.
ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த பின் இதற்கு பதில் மனு எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் அடிப்படை உறுப்பினர் இல்லை. எனவே கட்சி அலுவலகத்தின் அதிகார உரிமையைக் கோர முடியாது. மேலும் கட்சியின் தலைமை அலுவலகத்தின் சாவியை ஒப்படைக்க கூறுவதில் எந்தவொரு முகாந்திரமும் இல்லை.
பண விவகாரங்களில் கையாடல் செய்த ஒருவரிடம் அலுவலக சாவியை ஒப்படைக்கக் கூடாது. அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் கட்சிக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட ஒருவர் தலைமை அலுவலக நிர்வாக உரிமையைக் கோர முடியாது. எனவே, அவரது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என இபிஎஸ் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த ஓபிஎஸ் மேல்முறையீடு செய்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகளால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மேலும் உச்சநீதிமன்றத்தில் இருந்து ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்களிடம் இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் முதலாவது உங்களை கட்சியில் இருந்து நீக்கி விட்ட பின் நீங்கள் எப்படி அலுவலகத்திற்கு உரிமை கூற முடியும் என்றும் நீங்கள் ஏன் உரிமையியல் நீதிமன்றத்தை நாடக்கூடாது. உரிமையியல் நீதிமன்றத்தை நாடி அலுவலக சாவியை பெறுவதற்கான நீதிமன்ற நடவடிக்கையை ஏன் நீங்கள் நாடக்கூடாது எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.