Skip to main content

சிற்ப கலைஞர் கத்தியால் குத்தி கொலை; மதுபோதையில் நண்பர் வெறிச்செயல்! 

Published on 04/06/2022 | Edited on 04/06/2022

 

One passed away near salem police arrested one

 

நாமக்கல் அருகே, குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கோயில் சிற்ப கலைஞரை நண்பரே கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கடையூரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (24). சிற்பக் கலைஞர். இவர், நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே ஓலப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோயிலில் சிற்ப வேலைகள் செய்து வந்தார். இவருடன், ஒரே ஊரைச் சேர்ந்த சிற்பக் கலைஞர்களான சீனிவாசன் (33) உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோரும் வேலை செய்து வந்தனர். 


இவர்கள் அனைவரும் கோயில் அருகிலேயே அறை எடுத்து தங்கி உள்ளனர். இந்த நிலையில், ஜூன் 2ம் தேதி, செந்தில்குமாருக்கு பிறந்த நாள் என்பதால், உடன் வேலை செய்து வந்த சிற்ப கலைஞர்கள் அவருக்கு கேக் வெட்டி கொண்டாடினர். செந்தில்குமார், அனைவருக்கும் மது விருந்து கொடுத்துள்ளார். உடன் வேலை செய்து வந்த சிற்ப கலைஞர்கள் எல்லோரும் மதுபோதை தலைக்கேறிய நிலையில், அவரவர் அறைகளுக்குச் சென்று விட்டனர். அதன்பிறகு, செந்தில்குமாரும் சீனிவாசனும் மட்டும் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது போதையில், இருவரும் ஒருவரையொருவர் ஆபாச வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர். 


ஒரு கட்டத்தில் அவர்களிடையே கைகலப்பு மூண்டது. ஆத்திரம் அடைந்த சீனிவாசன், அருகில் கிடந்த கத்தியை எடுத்து செந்தில்குமாரை சரமாரியாக குத்தினார். இதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகராறு நடக்கும் சத்தம் கேட்டு உடன், வேலை செய்து வரும் மற்ற சிற்பக் கலைஞர்கள் அங்கு ஓடிவருவதற்குள் சீனிவாசன் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்த செந்தில்குமாரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 


இதுகுறித்து அவர்கள் வெண்ணந்தூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்தனர். சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதே பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த சீனிவாசனை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது!

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
10 Tamil Nadu fishermen arrested

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் வழக்கம் போல் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அதன்படி நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேரைக் கைது செய்தனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கைதான 10 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மீனவர்களின் விசைப்படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்து பறிமுதல் செய்துள்ளனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரைக் கைது செய்யப்பட்டனர். இதனையொட்டி கைது செய்யப்பட்ட 22 மீனவர்களையும், 3 விசைப்படகுகளையும் விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று (24.06.2024) ஒரு நாள அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே சமயம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்திடக் கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

‘ஆமைகளின் எண்ணிக்கை உயர்வு’ - வனத்துறை சாதனை!

Published on 16/06/2024 | Edited on 16/06/2024
The number of turtles has increased a forest dept achievement

தமிழ்நாட்டின் 1076 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரையில் வரலாற்று ரீதியாக ஆமைகள் கூடு கட்டுவதற்காக வருகை தருகின்றன. ஆலிவ் ரிட்லி, பச்சை ஆமை, ஹாக்ஸ்பில் ஆமை, லாக்கர்ஹெட் ஆமை மற்றும் லெதர்பேக் ஆமை ஆகிய ஐந்து வகையான கடல் ஆமைகள் தமிழக கடற்கரைக்கு வருகை தருகின்றன. இவற்றில், முக்கியமாக ஆலிவ் - ரிட்லி ஆமைகள் அதிக எண்ணிக்கையில் வருகின்றன. அவை கூடு கட்டுவதற்கும் மற்றும் அவற்றின் தீவனமாகவும் தமிழ்நாட்டின் தென்பகுதியான கோரமண்டல் கடற்கரை அறியப்படுகின்றன, அதேசமயம் மற்ற வகை ஆமைகள் தற்போது கூடு கட்டுவது அரிதாக உள்ளன.

கடல் ஆமைகளுக்கான பருவம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் தொடங்கும். இந்நிகழ்வின் போது வனத் துறையானது தற்காலிக குஞ்சு பொரிப்பகங்களை உருவாக்குதல், ஊழியர்களுக்கான வழிகாட்டுதல் திட்டம் மற்றும் துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு கூட்டங்களைத் தொடர்ந்து நடத்துதல், தினசரி இரவு ரோந்துப் பணிகளைத் தொடர்தல். மாணவர்கள் கடல் ஆமைகள் பாதுகாப்பு கூடு கட்டுதல் (SSCN) மற்றும் பிற தன்னார்வலர்களுடன் இணைந்து ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. வனத் துறைப் பணியாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள், இந்த நோக்கத்திற்காக நியமிக்கப்பட்டவர்கள் மூலம் கூடுகள் அடையாளம் காணப்பட்டு. வனத் துறையின் குஞ்சு பொரிப்பகங்களில் வைத்துப் பாதுகாக்கப்படுகின்றன. 

The number of turtles has increased a forest dept achievement

இந்த ஆண்டு ஆமைகள் கூடு கட்டும் பருவத்தில் 13 கடலோர மாவட்டங்களில் உள்ள 8 பிரிவுகளில் 53 குஞ்சு பொரிப்பகங்களை வனத்துறை அமைத்தது. 2363 கூடுகள் மூலம் மொத்தம் 2 லட்சத்து 58 ஆயிரத்து 775 முட்டைகள் சேகரிக்கப்பட்டு, அவை துறைசார் குஞ்சு பொரிப்பகங்களுக்கு மிக நுட்பமாக இடமாற்றம் செய்யப்பட்டன. இந்த அனைத்து குஞ்சு பொரிப்பகங்களிலும் ஒவ்வொரு குஞ்சும் வெளிவரும் வரை இடமாற்றம் செய்யப்பட்டதிலிருந்து 24 மணி நேரமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு செய்யும் போது அனைத்து கூடுகளின் அளவீடுகள் மற்றும் வெப்பநிலை உட்பட அனைத்தும் பதிவு செய்யப்பட்டன. அதனையொட்டி இந்த ஆண்டு வனத்துறை, 2 லட்சத்து 15 ஆயிரத்து 778 ஆமைக் குஞ்சுகளைக் கடலுக்கு அனுப்பியுள்ளது. இதுவே. இதுவரை பதிவுசெய்யப்பட்ட எண்ணிக்கையில் அதிகபட்சமாகும்.

கடந்த ஆண்டு 1 லட்சத்து 82 ஆயிரத்து 917 குஞ்சுகள் அனுப்பப்பட்டன. கடலூர், நாகப்பட்டினம் மற்றும் சென்னை மாவட்டங்களில் முறையே கடலூர் 89 ஆயிரத்து648, நாகப்பட்டினம் 60 ஆயிரத்து 438 மற்றும் சென்னை 38 ஆயிரத்து 230 என அதிக அளவில் ஆமை குஞ்சுகளை அனுப்பியுள்ளன. இந்த ஆண்டு, வனத்துறையிலிருந்து 185 கள ஊழியர்களும் மற்றும் 264 தன்னார்வலர்களும் இந்த பாதுகாப்பு நடவடிக்கையில் தீவிரமாகப் பங்கேற்றனர். இத்துறையின் முயற்சிகளுக்கு வலு சேர்க்கும் வகையில், சென்னை மற்றும் நாகப்பட்டினத்தில் கடல் ஆமைகள் பாதுகாப்பு மையங்களை அமைப்பதாகத் தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது இந்த உயிரினங்களுக்கான பாதுகாப்பு முயற்சிகளுக்கு மேலும் உத்வேகம் அளிக்கும் எனத் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.