Skip to main content

"அரியலூரில் கரோனா வைரஸை பரப்ப தமிழக அரசின் தொழில்துறை செயலாளர் துடிக்கிறாரா"? - எஸ்.எஸ். சிவசங்கர் கண்டனம்

Published on 02/04/2020 | Edited on 02/04/2020

 


கரோனா வைரஸை தடுக்க பிரதமர் ஊரடங்கை அறிவித்த நிலையில் அரியலூரில் அரசு சிமெண்ட் ஆலை நாளை முதல் இயக்க தொழிலாளர்கள் வரவேண்டும் என்று தொழில்துறை செயலாளர் ஆணையிட்டுள்ளதாகவும், இதனால் அரியலூரில் கரோனா வைரஸ் பரவும் நிலை ஏற்படும் எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார் அரியலூர் மாவட்ட தி.மு.க செயலாளர் எஸ்.எஸ். சிவசங்கர்.

 

இதுதொடர்பாக எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அரியலூரில் அரசுக்குச் சொந்தமான சிமெண்ட் ஆலை உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஊரடங்கை அறிவித்த பிறகும்,இந்த ஆலை இயங்கி வந்தது. அதற்குத் தொழிலாளர்களும், அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பத்திரிகைகளில் செய்தி வெளி வந்தது. 
 

மக்களுடைய எதிர்ப்பிற்கு பிறகு, ஆலை இயக்கம் நிறுத்தப்பட்டது.ஆலை நிறுத்தப்பட்ட நாட்களிலும் தொழிலாளர்கள் ஆலைக்கு வர வேண்டும்,இல்லை என்றால் சம்பளம் கிடையாது என அறிவித்து,தொழிலாளர்களை வாட்டினார்கள்.

 

Ariyalur Cement


 

இந்த நிலையில், மீண்டும் நாளை (03.04.2020) முதல் ஆலையை ஓட்ட வேண்டும் எனத் தமிழக அரசின் தொழில்துறை செயலாளர் ஆணையிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரிகள் அதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள். 
 

ஆலை ஓடும் சூழல் வந்தால், 400-க்கும் மேற்பட்டோர் ஆலைக்கு வரும் நிலை ஏற்படும். இவர்கள் பத்து கிலோமீட்டர் சுற்றளவிலுள்ள தங்கள் இருப்பிடத்திலிருந்து ஆலைக்கு வர வேண்டும்.இதை ஒட்டி இந்தப் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகரிக்கும்.இது தேவையில்லாத பிரச்சினையை அதிகரிக்கும். வைரஸ் பரவலை அதிகரிக்கும்.
 

உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் போல சிமெண்ட் ஒன்றும் அத்தியாவசியப் பொருள் அல்ல.எங்கும் கட்டுமானப் பணி நடைபெறவில்லை. இந்த நிலையில் சிமெண்ட் உற்பத்தியைத் தொடங்க வேண்டிய அவசியம் என்ன? அப்படி அவசியம் என்றால் ஆலையில் ஏற்கனவே 10,000 டன் சிமெண்ட் கையிருப்பில் உள்ளது.அதுமட்டுமல்லாமல் 30,000 டன் சிமெண்ட் உடனடியாகத் தயாரிக்க மூலப்பொருட்களும் கையிருப்பில் உள்ளன.
 

சிமெண்ட்டைத் தயாரித்தாலும் வெளியில் அனுப்பவோ, விற்கவோ இயலாது. இப்படிப்பட்ட நிலையில் சிமெண்ட் ஆலையை ஓட்ட வேண்டிய அவசியம் என்ன?  
 

சில தனிப்பட்ட லாபங்களுக்காக ஆலையை ஓட்ட முயற்சி நடக்கிறதா என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது. மூலப்பொருட்கள் கொள்முதல்,ஒப்பந்த தொழிலாளர்கள் ஒப்பந்தம் போன்றவற்றின் மூலம் தனிப்பட்ட பணப்புழக்கம் தொடர்வதற்காக இந்த முயற்சியா என்ற வினா உள்ளது.
 

மத்திய, மாநில அரசுகள் அனைவரையும் வீட்டுக்குள் தங்க வைக்க கடும் முயற்சி எடுக்கும் நிலையில், அரியலூர் சிமெண்ட் ஆலையை ஓட வைக்க ஏன் இந்த முயற்சி? 400 தொழிலாளர்களின் குடும்பமும் பயத்தோடு ஒவ்வொரு நாளையும் கடத்த வேண்டுமா? 
 

அப்படி ஆலை ஓடுவது அவசியம் என்றால், அதற்கான காரணத்தை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.அதை விடுத்து திருட்டுத்தனமாக இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய காரணம் என்ன? உடனே தமிழக அரசு இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். சிமெண்ட் ஆலையை ஓட்டும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என அரியலூர் மாவட்ட தி.மு.க சார்பாக வலியுறுத்துகிறேன்''.இவ்வாறு கூறியுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

குஜராத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
worth Rs.300 crore seized in Gujarat

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இதன் மதிப்பு சுமார் ரூ.300 கோடி எனப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். 7 பேர் கைதான நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் என்றும் கூறப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், இதே போன்று கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி  சுமார் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.