Skip to main content

உருவாக்கப்படாத தலைமை ஆசிரியர் பணியிடங்கள்; அதிகாரிகள் அலட்சியம் 

Published on 16/05/2023 | Edited on 16/05/2023

 

officers do not create headmasters posting in primary schools 

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் புதிதாகத் தொடங்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்குத் தலைமை ஆசிரியர்களையே நியமிக்கப்படாமல் அலட்சியமாக உள்ளதால் மாணவர்களைச் சேர்க்கப் பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர்.

 

திருமயம் ஊராட்சி ஒன்றியம் கும்மங்குடி கிராமத்தில் அரசு உதவி பெறும் சரஸ்வதி கலாசாலை தொடக்கப்பள்ளியை அரசு ஏற்று ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியாக கடந்த 10 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக்கான புதிய வகுப்பறை கட்டடத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சமீபத்தில் கோலாகலமாக விழா நடத்தி திறந்து வைத்துள்ளார். ஆனால் இந்தப் பள்ளிக்கு 10 ஆண்டுகளாகவே தலைமை ஆசிரியர் பணியிடம் ஒதுக்கப்படாமல் 2 இடைநிலை ஆசிரியர்களைக் கொண்டே செயல்படுகிறது. 2022-2023 கல்வி ஆண்டில் 32 மாணவர்கள் பயின்று வந்தார்கள்.

 

அதேபோல கறம்பக்குடி ஒன்றியம் முருங்கைக்கொல்லை கிராமத்தில் 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கும் தலைமை ஆசிரியர் பணியிடம் உருவாக்கப்படாமல் உள்ளது. இங்கு பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 35 ஆகும். இதே போல குன்றாண்டார் கோயில் ஒன்றியம் ஒடுக்கூர் ஊராட்சி கொட்டப்பள்ளம் கிராமத்திலும் 2018 ஆம் ஆண்டு புதிய அரசு தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. வட்டாரக்கல்வி அலுவலர்கள் புதிய வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்தனர். ஆனால் தலைமை ஆசிரியர் பணியிடம் உருவாக்கப்படாமல் உள்ளது. இங்கு 25 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதே கல்வி ஆண்டில் அன்னவாசல் ஒன்றியம் உய்யக்குடிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டு இடைநிலை ஆசிரியருடன் பள்ளி செயல்படுகிறது. இங்கும் தலைமை ஆசிரியர் பணியிடம் உருவாக்கப்படவில்லை. இங்கு பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 24 ஆகும். இப்படி பல பள்ளிகள் உள்ளன.

 

இது குறித்து ஆசிரியர்கள் கூறும்போது, "தொடக்கப்பள்ளி மாணவர்கள் தொலைதூரத்தில் இருந்து வருவதால் அவர்களின் சிரமங்களை தவிர்த்து அனைவரையும் கல்வி கற்க வைக்கும் நல்ல எண்ணத்தில் அந்தந்த கிராமத்தில் உள்ள பள்ளி வயது குழந்தைகளின் எண்ணிக்கையில் புதிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியது. அந்த புதிய பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களை அதிகாரிகள் உருவாக்கி அரசுக்கு தெரியப்படுத்தி காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று அரசாணை இருந்தும் கூட அதிகாரிகளின் அலட்சியத்தால் சுமார் 10 ஆண்டுகளாக தலைமை ஆசிரியர் பணியிடங்களே உருவாக்கப்படாமல் உள்ளது வேதனையாக உள்ளது.

 

அரசின் 7.5% இட ஒதுக்கீடு அறிவிப்பு மற்றும் கொரோனா காலத்திற்கு பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவர்களின்  சேர்க்கை அதிகரித்து வருகிறது. ஆனால் அதிகாரிகள் கவனக்குறைவால் பல பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. வரும் கல்வி ஆண்டில் அனைத்துப் பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் நியமனம் செய்யாவிட்டால் மாணவர்கள் சேர்க்கை பாதிக்கப்படும்" என்றனர். தமிழ்நாடு அரசும் கல்வித்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்து மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கலாம். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி- சட்டக்கல்லூரி மாணவர் கைது

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Law college student arrested for fraud of getting a job in the Secretariat

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் நடந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சன்னதிவயல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சத்யராஜ் (37). தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் செய்யும் ஊழியராக உள்ளார். இவர் கடந்த 25 அம் தேதி அறந்தாங்கி காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் 'நான் அரிமளம் பகுதிக்கு சென்றிருந்த போது மீனாட்சிபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கார்த்திக் அறிமுகமானார். தான் சென்னை செட்டியார் சட்டக்கல்லூரி மாணவர் என்றும் சோசியல் மீடியாவில் நிறைய பதிவுகள் போடுவேன். எனக்கு அரசியல்வாதிகள், அதிகாரிகளுடன் நல்ல பழக்கம் உள்ளது என்றும் சொன்னார்.

அதன் பிறகு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தலைமை செயலகத்தில் யாருக்காவது வேலை வேண்டும் என்றால் சொல்லுங்கள் வாங்கித் தருகிறேன் என்றார். அப்போது எனக்கே வேலை வேண்டும் என்றேன். அதற்கு ரூ.3 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்றார். நானும் அவர் சொன்னதை நம்பி நான் சேமித்து வைத்திருந்த பணம் ரூ.1 லட்சத்தை வங்கி கணக்கில் செலுத்துவதாக சொன்ன போது வேண்டாம் நேரில் வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னவர் கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி கார்த்திக் புதுக்கோட்டை வந்திருப்பதாக தெரிந்தது. நானும் என் நண்பன் பாலகிருஷ்ணனும் அன்று மாலை புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சந்தித்து முதல் தவணையாக ரூ.1 லட்சம் பணமாக கொடுத்தேன். பணத்தை வாங்கிக் கொண்டவர் மீதி ரூ.2 லட்சத்தை ரெடி பண்ணுங்க என்று சொல்லிவிட்டு போனார்.

அதன் பிறகு வேலை என்னாச்சு என்று கேட்க பலமுறை அவரை தொடர்பு கொண்டும் போனை எடுக்கவில்லை. இந்நிலையில் தான் இன்று (ஏப்ரல் 25 ஆம் தேதி) அறந்தாங்கி எம்ஜிஆர் சிலை அருகே நான் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒரு நபர் என்னிடம் நங்கள் தான் சத்திரயாரஜா என்று கேட்டவர் கார்த்திக் உங்களிடம் பேச வேண்டும் என்று சொன்னார் என்று சொல்லிவிட்டு அவரது செல்போனில் வாட்ஸ் அப் காலில் கார்த்திக்கிடம் பேசச் சொன்னார். அப்போது ஏன் என் போனை எடுக்கவில்லை. என் வேலை, பணம் என்னாச்சு என்று கேட்ட போது, உன் பணம் வெளியில் கொடுத்துவிட்டேன். இனிமேல் பணமும் இல்லை, வேலையும் இல்லை என்று சொன்னதோடு இனிமேல் பணம் கேட்டால் எனக்குத் தெரிந்த காரைக்குடி ரவுடிகளை வைத்து உன்னை தீர்த்துக்கட்டிவிடுனே் என்று கொலை மிரட்டல் செய்ததோடு தகாத வார்த்தைகளிலும் பேசிவிட்டு போனை நிறுத்திவிட்டார். என்னிடம் போனைக் கொடுத்த நபரும் என்னை மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

எனக்கு தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக என்னிடம் பணமும் வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டு என்னையும் என் குடும்பத்தையும் கொன்று விடுவதாக கொலை மிரட்டல் விடுத்த கார்த்திக் மீது நடவடிக்கை எடுத்து என் பணத்தையும் மீட்டுத் தர வேண்டும் என்று அந்தப் புகாரில் கூறியுள்ளார்.

புகார் குறித்து வழக்கு பதிவு செய்த அறந்தாங்கி காவல் ஆய்வாளர் கருணாகரன் தனிப்படை அமைத்து வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த சட்டக்கல்லூரி மாணவர் கார்த்திக்கை சென்னையில் கைது செய்து அறந்தாங்கி காவல் நிலையம் கொண்டு வந்துள்ளனர். மேலும் விசாரனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் சென்னை முதல் அறந்தாங்கி வரை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

பள்ளிகளில் வழங்கப்படும் தண்டனை தொடர்பான வழக்கு; பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court ordered the school education department for Case related to punishment in schools

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனை விதிப்பதை தடை செய்ய வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. 

இது தொடர்பான மனு இன்று (25-04-24) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘பள்ளி குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனையைத் தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்த வேண்டும். ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். 

விதிகளை மீறி குழந்தைகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால், அதன்பேரில் அதிகாரிகள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விதிகளை அமல்படுத்துவதை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர், மூத்த மாணவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்” என்று கூறி பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டது.