Skip to main content

பள்ளிகளில் இனி அச்சிட்ட வருகை பதிவேட்டிற்கு வேலை இல்லை.... இனி எல்லாமே 'ஆப்' தான்; ஆக. 1 முதல் நடைமுறை!! 

Published on 01/08/2022 | Edited on 01/08/2022

 

No more printed attendance registers in schools....everything is 'App'! Aug. 1st Practice!!


அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை விவரங்கள் அச்சிட்ட வருகைப் பதிவேடு புத்தகம் மற்றும் செல்போன் செயலி மூலம் பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், ஆகஸ்ட் 1- ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல், செயலியில் மட்டும் பதிவு செய்தால் போதுமானது என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

 

தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 

 

அதில் கூறியுள்ளதாவது, மாணவர்களின் இடைநிற்றலால் ஏற்பட்டுள்ள குறைபாட்டினை சரி செய்து, அவர்கள் கல்வியில் முழு கவனம் செலுத்த அறிவுறுத்த வேண்டும். 2023- 2024ம் கல்வி ஆண்டிற்கான நலத்திட்டங்கள் வழங்க அனைத்து முன்னேற்பாடுகளும் செய்து கொள்ள வேண்டும். 

 

முதல்வரின் அறிவிப்புகளை முறையாக செயல்படுத்தவும், திட்டங்கள் உரிய நேரத்தில் மாணவர்களின் பயன்பாட்டிற்கு செல்வதையும் உறுதி செய்ய வேண்டும். அரசு தொடக்க மற்றும் நர்சரி பள்ளிகளின் நிலைமைகளைக் கண்டறிந்து,  குறைபாடுகள் இருப்பின் அதனை சரி செய்யும் வகையில் அரசின் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும். 

 

மாதிரி பள்ளிகளில் நடப்புக் கல்வி ஆண்டுமுதல் அந்தந்த தலைமை ஆசிரியரே நிர்வாக அதிகாரியாக செயல்பட அனுமதிக்க வேண்டும். மாதந்தோறும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். பள்ளிகளின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்கவும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு தொடர்ந்து வீட்டுப்பாடம் கொடுப்பதை ஆய்வு செய்ய வேண்டும். 

 

பள்ளிகளுக்கு கூடுதல் ஆசிரியர்கள் தேவைப்படும் பட்சத்தில், அருகில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்தும் கூட மாற்றுப்பணி மூலம் பெற்றுக் கொள்ளலாம். துவக்க அனுமதி பெறாத மெட்ரிக் பள்ளிகள் தொடர்ந்து செயல்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தலைமை ஆசிரியர்கள், ஏதேனும் ஒரு வகுப்பிற்கு பாடம் கற்பிக்க அறிவுறுத்த வேண்டும். பள்ளி தொடர்ந்து நடைபெற்று வரும்போது பள்ளிக்கோ, குறிப்பிட்ட வகுப்பிற்கோ இடையில் விடுமுறை அளிக்கக் கூடாது. 

 

கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களின் அனுமதியின்றி விடுமுறை அளித்தல் கூடாது. ஆசிரியர்கள் தொடர் விடுப்பில் இருக்கும்போது கற்பித்தல், கற்றல் தடைபடாமல் இருக்க மாற்று ஆசிரியரோ அல்லது விடுமுறை முடிந்து வந்த ஆசிரியரோ தொடர் சிறப்பு வகுப்புகளை நடத்த அறிவுறுத்த வேண்டும். 

 

ஆகஸ்ட் 1- ஆம் தேதி முதல் மாணவர்கள், ஆசிரியர்களின் வருகை விவரங்களை  வருகைப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டாம். வருகைப் பதிவினை செயலி வாயிலாக பதிவு செய்தால் மட்டும் போதுமானது.

 

ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு கோருதல்,  அனுமதி மற்றும் பிற பணி சார்ந்த தேவைகளுக்கு விண்ணப்பிக்க tnsed_school செயலியை மட்டும் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் உபரி பணியிடங்களை தேவைப்படும் அரசுப்பள்ளிகளுக்கு மாற்றுப்பணியாக வரும் 15 தேதிக்குள் வழங்க வேண்டும். 

 

நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள், தொழிற்கல்வி பாடப்புத்தகங்கள் பெற்று வழங்குவதில் ஏற்படும் காலதாமத்தை குறைக்க உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும். அனைத்து வகை மன்றச் செயல்பாடுகளும் தொடர்ந்து செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் 3வது வாரம் மன்ற செயல்பாடுகளின் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். 

 

ஓவிய ஆசிரியர்களுக்கு வகுப்புகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறதா என கண்காணிக்க வேண்டும். மாணவர்களின் வருகையை வகுப்பு வாரியாக 'எமிஸ்' தளத்தில் பதிவிட வேண்டும். சம்பந்தப்பட்ட இணை இயக்குநர்கள் அனுமதியின்றி ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் எந்தவித மாறுதலும் வழங்கக் கூடாது. 

 

தொழில்கல்வி பிரிவு அனுமதியின்றி வகுப்புகள் செயல்படக் கூடாது. அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை சிவகங்கை, விருதுநகர், நாமக்கல் மாவட்டங்களில் அதிகமாக உள்ளன. ஆகவே, சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இதில் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.