Skip to main content

நிர்மலா தேவி மீண்டும் புழல் சிறையில் அடைப்பு: 3 மணி நேரம் நடந்த குரல் பரிசோதனை

Published on 28/06/2018 | Edited on 28/06/2018

 

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியை சேர்ந்த பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை ஆசை வார்த்தை கூறி தவறாக நடத்த முயன்ற விவகாரம் நக்கீரன் இதழில் முதன் முதலில் வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கான ஆடியோவும் வாட்ஸ் அப்களில் பின்னர் வெளியாகி தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்கினால் உங்களுக்கு செமஸ்டர் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும் என்று செல்போனில் பேசி நிர்மலாதேவி ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியது மாணவிகளின் பெற்றோருக்கு இடி விழுந்தபோல் இருந்தது.

 

 


இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை பொறுத்தவரையில் மாணவிகளிடம் செல்போனில் பேசியது நிர்மலாதேவிதான் என்பதை உறுதிபடுத்த வேண்டிய கட்டாயம் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நிர்மலா தேவியை சென்னைக்கு அழைத்துச் சென்று குரல் பரிசோதனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதற்கு கோர்ட்டு அனுமதி அளித்தது.

 

 

 

 


இதனை தொடர்ந்து புதன்கிழமை காலையில் மதுரை சிறையில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்ட நிர்மலாதேவி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இன்று காலையில் அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் அவர் வெளியில் அழைத்து வரப்பட்டார். மெரினா காமராஜர் சாலையில் டி.ஜி.பி. அலுவலகம் அருகில் உள்ள தடயவியல் துறை அலுவலகத்துக்குள் காலை 10.25 மணி அளவில் நிர்மலாதேவியை போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு 5 சுற்றுகளாக குரல் பரிசோதனை நடத்தப்பட்டது.

 

 

 

 


அங்கு அவருக்கு சுமார் 3 மணி நேரம் குரல் பரிசோதனை நடைபெற்றது. குரல் பரிசோதனை முடிந்தவுடன் நிர்மலா தேவி சென்னை புழல் சிறைக்கு மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டார். நிர்மலாதேவியின் செல்போன் உரையாடல் அடங்கிய குரலுடன் இப்போது பதிவு செய்யப்பட்டுள்ள குரல் மாதிரி ஒப்பிட்டு பார்க்கப்பட உள்ளது. இதன் பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தங்களது அடுத்த கட்ட விசாரணையை தீவிரப்படுத்துவர்.

 

 

சார்ந்த செய்திகள்