Skip to main content

குழந்தையுடன் கிணற்றில் குதித்த தாய்... மகளையும் பேரனையும் போராடி மீட்ட பாட்டி!

Published on 06/04/2022 | Edited on 06/04/2022

 

police

 

இரண்டு வயது மகனுடன் தாய் தற்கொலை செய்து கொள்வதற்காக கிணற்றில் விழுந்த நிலையில், மகளின் உயிரையும் பேரனின் உயிரையும் காப்பாற்ற பாட்டி கிணற்றில் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்துள்ளது பால்மடை பகுதி. இப்பகுதியைச் சேர்ந்த கார்த்திகா என்பவருக்கும் சக்திகுமார் என்பவருக்கும் 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்த சக்திகுமார் கரோனா காலத்தில் வேலையிழந்ததால் மனமுடைந்து காணப்பட்டார். அதனைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார் சக்திகுமார். கணவன் தற்கொலைக்குப் பிறகு மனமுடைந்த கார்த்திகா தனியே தனது இரண்டு வயது மகனுடன் தாய் வீட்டில் வாழ்ந்து வந்தார். 

 

இதற்கிடையில் குடும்பத்தின் வறுமைநிலை காரணமாக திருமணத்தின் போது தன் பெற்றோர் வரதட்சணையாக கொடுத்த 21 பவுன் நகையை கொடுக்கும்படி மாமனார் மாமியாரிடம் கார்த்திகா கேட்டு வந்துள்ளார். ஆனால் சக்திகுமாரின்  தந்தை சுப்பிரமணியன் நகையை தர மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த கார்த்திகா கணவன் தற்கொலை செய்துகொண்ட அதே கிணற்றில் தனது இரண்டு வயது மகனுடன் குதித்துள்ளார். இதனைக் கண்ட கார்த்திகாவின் தாயார் சரஸ்வதி மகனையும் பேரனையும் காப்பாற்றும் நோக்கில் கிணற்றுக்குள் குதித்துள்ளார். பின்னர் கிணற்றில் இருந்த கயிறை பிடித்துக்கொண்ட சரஸ்வதி பேரன் மற்றும் மகளை கயிற்றால் இறுகி பிடித்துக்கொண்டு கூச்சலிட்டுள்ளார். மூவரும் கிணற்றுக்குள் குதித்தது தொடர்பாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கார்த்திகாவையும், அவரது 2 வயது மகனையும் இவர்கள் இருவரையும் காப்பாற்ற கிணற்றில் குதித்த சரஸ்வதியையும் போராடி மீட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்