Skip to main content

குழந்தை பிறந்த சில மணிநேரத்தில் தாய் உயிரிழப்பு! மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

Published on 08/08/2023 | Edited on 08/08/2023

 

Mother passes away after maternity in cuddalore

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள மலையனூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது மனைவி கல்பனா(20). ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கல்பனாவை நேற்று விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்தனர். காலை 11 மணியளவில் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.

 

இந்தநிலையில் மாலை 3 மணியளவில் திடீரென அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனடியாக மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி கல்பனா பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் அவருக்கு உரிய முறையில் சிகிச்சைகள் அளிக்கவில்லை எனவும், அவரது சாவில் சந்தேகம் உள்ளது எனவும் கூறி விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். மேலும் பிரேதத்தை வாங்கவும் மறுப்பு தெரிவித்தனர். 

 

இதனால் மருத்துவமனை நிர்வாகம் அவரது உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்காக ஆம்புலன்சில் ஏற்றிய போது, கல்பனாவின் உறவினர்கள் பிரேதத்துடன் செல்ல மறுப்பு தெரிவித்து ஆம்புலன்ஸில் ஏற மறுத்தனர். இதனால் கல்பனாவின் பிரேதம் மட்டும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கல்பனாவின் உறவினர்களிடம் விருத்தாசலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்