Skip to main content

தனியாக இருந்த 85 வயது மூதாட்டியிடம் பணம் நகை திருட்டு

Published on 23/09/2020 | Edited on 23/09/2020

 

Money and jewelery stolen from 85-year-old lady...
மாதிரி படம்

 

 

விழுப்புரம் நகரை ஒட்டி இருக்கும் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் 85 வயது தையல்நாயகி. இவர் தனியாக ஒரு குடிசை வீட்டில் வாழ்ந்துவருகிறார். நேற்று மதியம் 2 மணி அளவில் இவர் வீட்டில் தனித்திருந்தபோது அறிமுகமில்லாத மர்ம மனிதர்கள் இருவர் தையல்நாயகியிடம் வந்து குடிக்க தண்ணீர் தருமாறு கேட்டுள்ளனர். 

 

அவர் தண்ணீர் எடுத்து வருவதற்கு வீட்டுக்குள் சென்றுபோது அவரை பின்தொடர்ந்து வீட்டிற்குள் சென்ற மர்ம நபர்கள் மயக்க மருந்து கலந்த துணியால் மூதாட்டி தையல்நாயகி முகத்தில் வைத்து அழுத்தி உள்ளனர். இதில் மயக்கமடைந்த மூதாட்டி கழுத்தில் இருந்த ஒரு சவரன் தங்க செயினையும் அவர் சுருக்குப் பையில் சேமித்து வைத்திருந்த ஏழாயிரம் ரூபாய் பணத்தையும் திருடிக்கொண்டு அந்த மர்ம நபர்கள் தப்பி சென்றுள்ளனர். 

 

மயக்கம் தெளிந்து எழுந்த தையல்நாயகி, பணமும் தன் கழுத்தில் கிடந்த செயினையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்து சத்தம் போட்டு கத்தி கதறி அழுதுள்ளார். இதனால் அக்கம்பக்கத்தினர் வந்து, அவர்களின் ஆலோசனையின்பேரில் தையல்நாயகி விழுப்புரம் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக அங்கு விரைந்துசென்ற போலீசார் சம்பவம் குறிப்பு தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் தையல்நாயகியிடம் திருடிச் சென்ற அந்த மர்ம கொள்ளையர்களை விரைவில் பிடித்துவிடுவதாக தையல்நாயகியிடம் போலீசார் உறுதி அளித்துள்ளனர். வறுமையில் வாடும் இவரையும் விட்டுவைக்கவில்லை அந்த ஈவிரக்கமற்ற கொள்ளையர்கள் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நூதன முறையில் திருடிய கொள்ளையர்கள்; கள்ளக்குறிச்சியில் துணிகரம்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Robbery with metal detector; Venture in Kalakurichi

கள்ளக்குறிச்சியில் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் நூதன முறையில் எந்த பகுதியில் நகைகள் உள்ளது என கண்டறிந்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள எஸ்.வி.பாளையம் பகுதியில் வசித்து வருபவர் அருள்ஜோதி. அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்களால் 67 சவரன் நகை மற்றும்  23 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்து வந்த நிலையில், வளவனூர் பகுதியைச் சேர்ந்த மாரி என்பவர் அவருடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. உதயா மற்றும் மாரி ஆகிய இருவரை கைது செய்த போலீசார், உருக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்த கொள்ளை அடிக்கப்பட்ட 25 சவரன் தங்கத்தை கைப்பற்றினர். மேலும் 2 லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.

இந்த கொள்ளை வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் தங்க நகை எங்கே இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள மெட்டல் டிடெக்டரை பயன்படுத்தி இவர்கள் கொள்ளையடித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story

அடுத்தடுத்து மூன்று கடைகளில் கொள்ளை;போலீசார் விசாரணை

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
Robbery in three shops in succession; police investigation

ஈரோட்டில் மூன்று கடைகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜாபர். இவர் அந்த பகுதியில் துரித உணவு கடை வைத்திருந்தார். நேற்று இரவு 12 மணியளவில் வியாபாரம் முடிந்தவுடன் கடையை பூட்டிவிட்டு சென்று விட்டார். இன்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் சாவியை திறந்து அதில் இருந்த ரூ.3000 பணம் திருட்டுப் போய் இருப்பது தெரியவந்தது.

அதனருகே உள்ள மற்றொரு குளிர்பான கடையின் பூட்டை  உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பணம் இல்லாததால் திரும்பிச் சென்று விட்டனர். குளிர்பானம் கடை அருகே ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் காய்கறி கடை நடத்தி வந்தார். நேற்றிரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு சென்றவர் இன்று காலை வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே கல்லாப்பெட்டியில் இருந்த ரூ. 26 ஆயிரம் ரொக்க பணம் திருட்டுப் போய் இருந்தது.

இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.  ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து மூன்று கடைகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி இருப்பது அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.