Skip to main content

திமுக குறித்த கேள்வி; பேச மறுத்த மு.க. அழகிரி

Published on 21/12/2022 | Edited on 21/12/2022

 

KS Alagiri refused to answer the question about DMK

 

2011 சட்டமன்றத் தேர்தலின்போது வட்டாட்சியரை தாக்கிய வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி உள்ளிட்ட 20 பேர் இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

 

கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது  மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோயிலுக்குள், கிராமத் தலைவர்கள் மற்றும் பொதுமக்களிடம் மு.க. அழகிரி ஆலோசனை நடத்தினார். அப்போது கோயில் கதவுகள் அடைக்கப்பட்டன.

 

தேர்தலில் ஓட்டு வாங்க அழகிரி பணம் பட்டுவாடா செய்வதாக அதிமுகவினர் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து மேலூர் தேர்தல் அதிகாரியும் வட்டாட்சியருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள், வீடியோ கேமராமேனுடன் அங்கு சென்று வீடியோ எடுத்தனர். இதற்கு அழகிரி கடும் எதிர்ப்புத் தெரிவித்து அழகிரியுடன் இருந்தவர்கள் தன்னை அடித்து, உதைத்ததாக வட்டாட்சியர் காளிமுத்து கீழவளவு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

 

இதனைத் தொடர்ந்து மு.க. அழகிரி, மதுரை துணை மேயர் மன்னன் மற்றும் திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு  செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி லீலா பானு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, முன்னாள் துணை மேயர் மன்னன் மற்றும் திமுக நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம், செந்தில், கருப்பணன், பொன்னம்பலம், ராமலிங்கம், நீதிதேவன் உள்ளிட்ட 20பேர் நேரில் ஆஜராகினர். இதனையடுத்து நீதிபதி வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜனவரி 6ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். 

 

மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு வழக்கில் ஆஜராக வந்த மு.க அழகிரிக்கு நிதி அமைச்சரின் ஆதரவாளரான விசா பாங்கின் உள்ளிட்ட திமுகவினர் அவரை வரவேற்று நேரில் சந்தித்துப் பேசினர். வழக்கு ஒத்திவைக்கப்பட்டதையடுத்து நீதிமன்றத்திலிருந்து புறப்பட்ட மு.க. அழகிரி திமுக அரசின் செயல்பாடு குறித்துக் கேட்ட பொழுது அதற்குப் பதில் அளிக்க மறுத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்