Skip to main content

அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் என்ன இடம்பெறும்? - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!

Published on 28/11/2020 | Edited on 28/11/2020

 

Minister sengottaiyan press meet at erode about admk election manifesto

 

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காசிபாளையம், குருமந்தூர், கோசணம், அஞ்சானூர், ஆண்டிபாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளில், அரசின் நலத் திட்டப் பணிகள், கன்று வளா்ப்பு கடனுதவி, மகளிர் சுய உதவிக் குழுகள் கடனுதவி என ரூ.6.19 கோடி மதிப்பிலான நலத்திட்டப் பணிகளைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 28 -ஆம் தேதி தொடங்கிவைத்தார். 
 


பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பாடத்திட்டம் குறைப்பது குறித்து அரசு ஏற்கனவே நிபுணர் குழு அமைத்துள்ளது. அக்குழுவின் அறிக்கை முதல்வரிடம் வழங்கப்பட்ட பிறகு, அடுத்த சில தினங்களில், இதற்கான அரசாணை வெளியிடப்படும். அதற்கு ஏற்ப கல்வித் தொலைக்காட்சியிலும் ஆன்லைன் மூலமும் பாடங்கள் மாணவ மாணவிகளுக்கு நடத்தப்படும். தற்போது இருக்கும் சூழ்நிலையில், அரையாண்டுப் பரீட்சை நடைபெறாது. கடந்த காலத்தில், 'ஜாக்டோ ஜியோ' போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை குறித்து இப்போது கருத்துக் கூற இயலாது. 


புதிய கல்விக் கொள்கை குறித்து நிபுணர் குழு, பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளரிடமிருந்து கருத்துக்களை அரசு திரட்டி வருகிறது. மத்திய அரசு 2023 முதல் புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதேபோல, விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க ஏற்கனவே அரசு ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளது. அக்குழு அனைத்துத் தரப்பு விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுடனும் கலந்து ஆலோசனை நடத்தி வருகிறது. 


அதன் அடிப்படையில் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார். அக்குழுவின் அறிக்கை விரைவில் வேளாண் துறை அமைச்சருக்குச் சமர்ப்பிக்கப்படும். புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கையை இந்த அரசு சிறப்பாகச் செய்துள்ளது என்று அனைத்துத் தரப்பு மக்களும் பாராட்டியுள்ளனர். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் ஏற்கனவே சென்னை மாநகராட்சி மேயராக இருந்துள்ளார். அவரது தந்தை முதல்வராக இருந்துள்ளார். அப்போதெல்லாம் என்ன நடந்தது என்பது அவருக்கே தெரியும். எனவே, அவரது குற்றச்சாட்டில் நியாயம் இல்லை. அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் என்ன இடம் பெறும் என்று கூற இப்போது இயலாது. அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி வைத்திருப்பதால், அதனுடைய வாக்கு வங்கி எவ்வளவு உயரம் என்பது தேர்தல் சமயத்தில்தான் தெரியும். அது மக்களின் கையில் உள்ளது” என்று கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.