Skip to main content

அமைச்சர் ராஜகண்ணப்பனின் அரசியல் பயணம்!

Published on 29/03/2022 | Edited on 29/03/2022

 

Minister Rajakannappan's political journey DETAILS

 

தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். சாதிப் பெயரைசொல்லி வட்டார வளர்ச்சி அலுவலரைத் திட்டியது உள்ளிட்ட சில புகார்கள் எழுந்த நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் முதல் முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

 

அமைச்சர் ராஜகண்ணப்பனின் அரசியல் பயணம் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

எம்.ஜி.ஆர். மீது கொண்ட பற்றால் கடந்த 1972- ஆம் ஆண்டு அ.தி.மு.க.வில் சேர்ந்தார் ராஜகண்ணப்பன். கட்சியில் படிப்படியாக வளர்ச்சி அடைந்து, மாவட்டச் செயலாளர் பொறுப்பு வரை உயர்ந்தார். கடந்த 1991- ஆம் ஆண்டு திருப்பத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற ராஜகண்ணப்பன், ஜெயலலிதா அமைச்சரவையில் நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை, மின்சாரத்துறைகளைக் கவனித்து வந்தார். 

 

பின்னர், அ.தி.மு.க. எதிர்க்கட்சியான போது, அக்கட்சியில் இருந்து விலகிய ராஜகண்ணப்பன், கடந்த 2000- ஆம் ஆண்டு 'மக்கள் தமிழ் தேசம்' என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து, கடந்த 2001- ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார். கடந்த 2006- ஆம் ஆண்டு தேர்தலில் தனது கட்சியைக் கலைத்துவிட்டு தி.மு.க.வில் இணைந்தார். 

 

அப்போது, இளையான்குடி தொகுதியில் வெற்றி பெற்ற அவர், கடந்த 2009- ஆம் ஆண்டு தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார். கடந்த 2009- ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிவகங்கைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதைத் தொடர்ந்து, 2011- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 

 

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், கடந்த 2019- ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க. வாய்ப்பு வழங்காததால் மீண்டும் தி.மு.க.வுக்கு தாவினார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் களமிறங்கி வெற்றி பெற்ற ராஜகண்ணப்பன், 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அமைச்சரானார். 

 

முக்கிய துறைகளில் ஒன்றான போக்குவரத்துத்துறையைக் கவனித்த ராஜகண்ணப்பன் மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.     

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.