Skip to main content

வெடி விபத்தில் இறந்தவர்களுக்கு அமைச்சர் நேரில் அஞ்சலி! 

Published on 24/06/2022 | Edited on 24/06/2022

 

Minister pays tribute to those passed away in cuddalore

 

கடலூர் அருகேயுள்ள எம்.புதூர் கிராமத்தில் மோகன்ராஜ் என்பவர் நாட்டு வெடி பட்டாசு தயாரிக்கும் தொழிற்கூடம் (கொட்டகை) வைத்துள்ளார். கோயில் திருவிழாக்கள் மற்றும் சுப, துக்க நிகழ்ச்சிகளில் வெடிக்க பயன்படுத்தும் நாட்டு வெடி பட்டாசுகளை தயாரிக்கும் பணியில் நேற்று 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என 5 பேர் ஈடுபட்டிருந்தனர்.

 

இந்நிலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு தயாரித்து வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடி பட்டாசுகள் வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு பணியில் இருந்த 5 பேரும் சிக்கியுள்ளனர். வெடித்து சிதறிய வெடிவிபத்தில் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த அம்பிகா(50) மற்றும் பெரிய காரைக்காடு கிராமத்தை சேர்ந்த சித்ரா(35) என்ற 2 பெண்களும் சி.என்.பாளையத்தை சேர்ந்த சத்யராஜ் (34) என்ற ஆணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் வசந்தா மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் படுகாயங்களுடன் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் உடல் முழுவதும் வெடி காயங்கள் ஏற்பட்டு வசந்தா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 


வெடிவிபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். இதனிடையே சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கடலூர் முதுநகர் காவல்துறையினர் நாட்டு வெடி தயாரிப்பு உரிமையாளர் மோகன்ராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர். குடிசைத் தொழிலாக நடைபெற்று வந்த வெடி தயாரிப்பில் நடந்த வெடி விபத்தில் மூன்று பேர் உடல் சிதறி பலியான சம்பவம் சுற்றுவட்டார கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
 


இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உயிரிழந்தவர்களின் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்த அமைச்சர் மாவட்டத்தில் நிகழும் இதுபோன்ற சம்பவங்கள் மேற்கொண்டு தொடராமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கையில் போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், நடைபெற்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் உரிய விசாரணை மேற்கொள்ளவும், வெடி தயாரிக்க உரிமம் பெறப்பட்டுள்ளதா, பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததா, மின்கசிவால் விபத்து நடந்ததா என ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார். 

 

மேலும் அவர், “இச்சம்பவம் அறிந்த முதல்வர் உயிர் இழந்தவர்களுக்கு தலா 3 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்க்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்கி இருக்கிறார். காயமடைந்தவர்களுக்கு முதல்தர சிகிச்சை அளிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார். 


மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன், “மாவட்டத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதையடுத்து அனைத்து வெடி தயாரிக்கும் பகுதிகளையும், பாதுகாப்புத் தன்மை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்"  எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.