Skip to main content

உள்ளாட்சி தேர்தலில் ப்ளக்ஸ், பேனருக்குத் தடை...மாநில தேர்தல் ஆணையம் அதிரடி...!

Published on 12/12/2019 | Edited on 12/12/2019

தமிழகம் முழுக்க  உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடர்ந்து  நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றி ஈரோட்டில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் விளக்கமளித்தனர். அப்போது, "கிராமப்புற உள்ளாட்சி அமைப்பான பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து கவுன்சிலர், யூனியன் கவுன்சிலர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து  கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் பணிகள் மாநிலம் முழுக்க தொடர்ந்து  நடத்து வருகிறது.

 

 local body election-State Election Commission



போட்டியிடும் வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல் செய்து, அவரின் வேட்பு மனு ஏற்கப்பட்டபின், வேட்பாளருக்கு வழங்கப்படும் வேட்பாளர் அங்கீகார நகலுடன், அந்த வேட்பாளர், ஒரு வாகனத்துக்கு மட்டும், அந்தந்த பகுதி மாவட்ட வருவாய் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். அதே போல் அவர் சார்ந்த பகுதியில் தலைவர்களின் பிரசாரம், பொதுக்கூட்டம் மற்றும் அரங்க கூட்டம் என எது நடத்துவதாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ., மற்றும்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் அல்லது டி.எஸ்.பி., ஆகியோரிடம் உரிய அனுமதி பெற வேண்டும். 

மிக முக்கியமானது  பேனர், பிளக்ஸ் போர்டு வைக்க முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அவரவர்களின் சின்னம், பிரச்சார விபரம், மக்களுக்குத் தரும் வாக்குறுதிகள்  இருந்தால், அவற்றை அச்சடித்த  துண்டு பிரசுரங்களில் மட்டுமே வழங்க வேண்டும். தேர்தலில் போட்டியிடும் பஞ்சாயத்து  கவுன்சிலர், 9,000 ரூபாய், பஞ்சாயத்து தலைவர், 34,000 ரூபாய், யூனியன் கவுன்சிலர் 85,000 ரூபாய், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர், 1.70 லட்சம் ரூபாய் வரை மட்டுமே செலவிட வேண்டும்.

இதற்கான செலவுத்தொகை கணக்குகளை, தேர்தல் முடிந்த ஒரு மாதத்திற்குள் தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்ய வேண்டும். சென்ற நாடாளுமன்ற  தேர்தலின்போது தேர்தல் கமிஷனால் வெளியிடப்பட்ட உணவு வகைகளின் விலைப்பட்டியலின் படியே, இந்த உள்ளாட்சி தேர்தலிலும்  கணக்கிடப்படும். அதற்கேற்றவாறு வேட்பாளர்கள் செலவுகளை வைத்துக் கொள்ள வேண்டும்.

அப்படி தேர்தல் செலவுத்தொகையை தாக்கல் செய்யாதவர்கள் மீது, தேர்தல் ஆணையம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும். அந்த வேட்பாளர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும். வேட்பு மனு தாக்கலின்போது, சம்பந்தப்பட்ட வேட்பாளர், அவரை முன்மொழிபவர் மற்றும் அவர் விரும்பும் மூன்று நபர்கள் என ஐந்து பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்யும் அறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.


தேர்தல் பணிகளை கவனிக்க, மாவட்ட அளவில் தேர்தல் பார்வையாளரும், சிறப்பு நுண் பார்வையாளர்களும் நியமிக்கப்படுகிறார்கள் . அவர்கள் வேட்பாளர்கள் செய்யும் பிரசாரம், செலவினம், தேர்தல் விதிமீறல் போன்றவைகளை கவனிப்பார்கள். வரும், 19ல் வேட்பாளர்கள் மனுவை வாபஸ் பெற்று, இறுதி பட்டியல் அறிவிக்கப்பட்டதும், தேர்தல் பறக்கும் படையினர் உடனே செயல்பட தொடங்குவார்கள்" என தெரிவித்தனர். 
 
.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமைத் தேர்தல் ஆணையர் தமிழகம் வருகை

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Chief Election Commissioner visits Tamil Nadu

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இந்தியத் தேர்தல் ஆணையமும் தேர்தல் தொடர்பான பணிகளை விரைவுபடுத்தி உள்ளது.

இந்த சூழலில் தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய கடந்த 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் அஜய் பாது தலைமையிலான தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழுவினர் தமிழகம் வந்திருந்தனர். இந்த குழுவினர் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு மற்றும் தேர்தல் ஆணையத்தின் முதன்மைச் செயலாளர் மலய் மாலிக் ஆகியோர் முன்னிலையில் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் காவல்துறை அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகள், தொழிலக பாதுகாப்புப் படை வீரர்கள், மாவட்ட ஆட்சியர்கள் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து தமிழகத்திற்கு கூடுதலாக 3 தேர்தல் அதிகாரிகளை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி மூத்த ஐஏஎஸ் அதிகாரியான சங்கர்லால் குமாவத் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாகவும், இணைத் தலைமை தேர்தல் அதிகாரிகளாக ஸ்ரீகாந்த், அரவிந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் பிப்ரவரி 23 ஆம் தேதி இந்தியத் தேர்தல் தலைமை ஆணையர் ராஜீவ் குமார் தமிழகம் வருகிறார். இவர் சென்னை தலைமைச் செயலகத்தில் பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர். 

Next Story

நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

Published on 22/01/2024 | Edited on 22/01/2024
Publication of the final voter list for the parliamentary elections

கடந்த ஜனவரி 1 ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 2024-ன் ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (22.01.2024) வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் 6 கோடியே 18 லட்சத்து 90 ஆயிரத்து 348 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அதில் ஆண் வாக்காளர்கள் 3 கோடியே 3 லட்சத்து 96 ஆயிரத்து 330 பேரும், பெண் வாக்காளர்கள் 3 கோடியே 14 லட்சத்து 85 ஆயிரத்து 724 பேரும் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 8 ஆயிரத்து 294 பேரும் ஆவர். இந்த சிறப்பு சுருக்கமுறை திருத்த காலத்தின்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்காக 13 லட்சத்து 88 ஆயிரத்து 121 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 13 ல்டசத்து 61 ஆயிரத்து 888 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதில் ஆண்கள் 6 லட்சத்து 17 ஆயிரத்து 623 பேரும், பெண்கள் 7 லட்சத்து 43 ஆயிரத்து 803 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 462 பேரும் ஆவர்.

செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உள்ளது. குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்குட்பட்ட கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக இரண்டாமிடத்தில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட துறைமுகம் சட்டமன்றத் தொகுதி உள்ளது. சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தின்போது, பெயர் சேர்த்தலுக்காக பெறப்பட்ட மொத்தப் படிவங்களில், 18 வயது முதல் 19 வயதுள்ள 5 லட்சத்து 26 ஆயிரத்து 205 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.