Skip to main content

பொங்கல் தொகுப்பில் பல்லி...? குற்றம்சாட்டியவரின் மகன் தற்கொலை! 

Published on 12/01/2022 | Edited on 12/01/2022
 Lizard in Pongal set ... Incident in thiruvallur

 

தமிழக அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு அறிவிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வந்தது. ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பில் இடம் பெற்றிருந்த புளியில் பல்லி இருந்ததாக குற்றச்சாட்டு தெரிவித்தவரின் மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழக அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு திட்டத்தின் மூலம் உணவுக்கு தேவையான 21 பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், கொடுக்கப்பட்ட பொருட்கள் தரமற்ற நிலையில் இருப்பதாக சிலர் புகார் தெரிவித்திருந்தனர். அப்படி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த  நந்தன் என்பவர் அரசு சார்பில் கொடுக்கப்பட்ட புளியில் பல்லி இருந்ததாக புகார் கூறியிருந்தார். இந்நிலையில் இதனால் அவதூறு பரப்பியதாக நந்தன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

 Lizard in Pongal set ... Incident in thiruvallur

 

சென்னை தலைமைச் செயலகத்தில்  நேற்று  (11/01/2022) மாலை 05.00 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி "பொங்கல் பரிசுத்தொகுப்பு கொள்முதலில் முறைகேடு நடைபெறவில்லை. வெளிப்படைத் தன்மையுடன் ஒப்பந்தம் கோரப்பட்டே கொள்முதல் நடைபெற்றது. அ.தி.மு.க. ஆட்சி முழுவதும் கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷன் என ஊழலில் திளைத்தது.

 

பொங்கல் பரிசு வழங்குவதில் அ.தி.மு.க. ஆட்சியில்தான் ஊழல் நிறைந்திருந்தது. ஆளும் அரசை குறைக்கூறும் நோக்கத்திலேயே ஓ.பி.எஸ். தவறான கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார். 2011- ஆம் ஆண்டு வரை வழங்கி வந்த பொங்கல் பரிசுத் தொகுப்பை 2012- ஆம் ஆண்டு முதல் அ.தி.மு.க. அரசு நிறுத்தியது. கடுமையான நிதி நெருக்கடியிலும் கூட கரோனா நிவாரண நிதியையும், நிவாரண பொருட்களையும் தி.மு.க. அரசு வழங்கியது. தி.மு.க. அரசு வழங்கிய பொங்கல் பரிசைப் பெற்ற அனைவரும் தரமானதாக உள்ளதாக பாராட்டுகிறார்கள். அதிமுக ஆட்சியில் முறைகேடு செய்தவர்கள் தற்போது தரமான பொங்கல் பரிசு வழங்குவதை குறை சொல்கிறார்கள்" எனத் தெரிவித்திருந்தார்.

 

 

 

இந்நிலையில் புளியில் பல்லி இருந்ததாக குற்றச்சாட்டு தெரிவித்த தந்தை நந்தன் மீது வழக்குப்பதிவு செய்ததால் மன உளைச்சல் அடைந்திருந்த அவரது மகன் குப்புசாமி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.