Skip to main content

குட்டிகளுடன் ஊருக்குள் உலாவும் சிறுத்தை... அச்சத்தில் தவிக்கும் கிராம மக்கள்!

Published on 16/08/2021 | Edited on 16/08/2021
Leopard roaming with cubs ...people suffering from not being able to come out

 

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உப்பிலியாபுரம் அடுத்த ஆங்கியம் கிராமத்தில் சிறுத்தை ஒன்று சில நாட்களுக்கு முன் இருவரைத் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறையினரின் கேமரா மூலம் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டு, உருவ அமைப்பின்படி, அது ஆண்சிறுத்தை எனத் தெரிவித்தனர். ஆனால், சிறுத்தையின் கால்தடங்களை பரிசோனைக்குட்படுத்திய பொழுது, அது பெண் சிறுத்தை எனத் தெரியவந்தது. அதே போல் கேமரா பதிவுகளின்படி, சிறுத்தை ஆங்கியம் காட்டிலிருந்து வெளியேறி கொல்லிமலை வனப்பகுதியில் நுழைந்துவிட்டதாக வனத்துறை அறிவித்தனர். இதனையடுத்து, ஆங்கியம் பொது மக்கள் நிம்மதியடைந்தனர். 

 

இந்நிலையில், கடந்த சில தினங்களாக, இரவு வேளைகளில் வயல்வெளிகளில் சிறுத்தையின் உறுமல் சத்தம் கேட்பதாக ஆங்கியம் பொதுமக்கள் புகார் எழுப்பினர். நேற்று காலை 10 மணியளவில் ஆங்கியத்தை சேர்ந்த 14வயது சிறுமி கமலி, தோட்டத்தில் வேலை பார்க்கும் தனது தாத்தாவிற்கு சாப்பாடு எடுத்துச்சென்று கொடுத்துள்ளார். பின்னர் திரும்பும் வழியில், சிறுத்தை உறுமலோடு குறுக்கே ஓடியதைக் கண்டு, செய்வதறியாது திகைத்து நின்றார். சிறிது நேரம் கழித்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு ஊருக்குள் வந்து பெரியவர்களிடம் சொன்னதன் பேரில், ஊர் மக்கள் விபரீதத்தைப் புரிந்து கொண்டு அழகாபுரி கிராம நிர்வாக அலுவலர் இளவரசன் மூலம் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். இது தவிர ஐடிஐ மாணவர் உதயன் என்பவர் அதே பகுதியில் இன்று இரண்டு சிறுத்தை குட்டிகளைப் பார்த்துள்ளார்.

 

அந்த சிறுத்தை குட்டிகள் அங்குமிங்கும் ஓடி விளையாடியதை உதயன் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து உதயன் கிராம முக்கியஸ்தர்களிடம் தகவல் அளித்துள்ளார். இதன் மூலம் பெண் சிறுத்தை குட்டிகளுடன் காட்டுப் பகுதியில் முகாமிட்டு இருப்பது தெரியவந்துள்ளது. விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள ஆங்கியம் பொதுமக்கள் இதனால் அச்சத்திலுள்ளனர். கூலி வேலையை நம்பியுள்ள தொழிலாளிகள், ஆடு, மாடுகளை வாழ்வாதாரமாகக் கொண்ட பொது மக்கள், விவசாயிகள் ஆகியோர் தோட்ட பகுதிகளுக்குச் செல்ல அச்சமடைந்துள்ளனர். சிறுவர்கள், குழந்தைகள் உயிர் பயத்துடன் உள்ளதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்கக் கோரிக்கை வைத்துள்ளனர். 

 

கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடித்தால் குட்டிகளைத் தவறவிட வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் இதை எவ்வாறு கையாளுவது என்பது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுடன் அந்த கிராமத்தில் முகாமிட்டுள்ள திருச்சி வனத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். சிறுத்தையின் நடமாட்டத்தை அறிய இன்று வனத்துறையினர் டிராப் கேமரா பொருத்தியுள்ளனர். மீண்டும் குட்டிகளுடன் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதால் கிராம மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி; சாம்பியன் பட்டத்தை வென்ற திருச்சி அணி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Trichy won the champion title for District Level Shooting Competition

திருச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் திருச்சி ரைபிள் கிளப் அணி சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. 

திருச்சி மாநகர காவல்துறை கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் மாநகர ரைபில் கிளப் 31.12.2021 ஆம் தேதி தொடங்கப்பட்டது. மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச அளவில் துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் செயல்பட்டு வரும் இந்த கிளப் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந. காமினி தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்திய ரைபிள் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த ரைபிள் கிளப்பில் மாவட்ட அளவிலான ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஏப்ரல் 27ல் தொடங்கி 28 வரை இருநாள்கள் நடைபெற்றன.

இதில் திருச்சி ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற சுமார் 340 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் 10 மீட்டர் சுடுதளத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் சிறுவர்கள், இளையோர் மற்றும் முதியவர்கள் என ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு என தரம் பிரிக்கப்பட்டு சப்யூத், யூத், ஜீனியர், சீனியர், மாஸ்டர் மற்றும் சீனியர் மாஸ்டர் என தனித்தனியாக பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெரும்பாலான போட்டிகளில் வெற்றி அதிக புள்ளிகளைப் பெற்று திருச்சி ரைபிள் கிளப் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச்சென்றது. 

போட்டியில் பங்கேற்ற மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி. கார்த்திகேயன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இரு வெள்ளி பதக்கங்களை வென்றார். மேலும் ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை(28-04-24) பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க செயலாளர் மற்றும் திருச்சி ரைபிள் கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றிபெற்ற 76 பேருக்கு தங்க பதக்கமும், 69 பேருக்கு வெள்ளி, 50 நபர்களுக்கு வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 195 பதக்கங்கள் வழங்கப்பட்டது. மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி கார்த்திகேயன் அவற்றை வழங்கி பாராட்டினார்.

Next Story

ரயில் பயணியிடம் கைவரிசை காட்டிய நபர்; போலீசார் அதிரடி நடவடிக்கை

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Police action on A person who shows his hand to a train passenger

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணியிடம் சங்கிலியைப் பறித்த நபரை, ரயில்வே போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

திருச்சியில் இருந்து நாகூர் செல்லும் விரைவு ரயில் ஏப்ரல் 26 ஆம் தேதி திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 5 ஆவது நடைமேடையில் புறப்படத் தயாராக நின்றிருந்தது. அதில் செல்லவிருந்த பயணிகள் ரயிலில் அமர்ந்திருந்தனர். அப்போது ஜன்னலோரத்தில் நின்றிருந்த மர்ம நபர் ஒருவர், ரயிலில் அமர்ந்திருந்த நெல்லையைச் சேர்ந்த க. வெங்கடேஷ் என்ற பயணியின் கழுத்தில் கிடந்த 1 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டார். 

இந்த சம்பவம் தொடர்பாக வெங்கடேஷ் போலீசாரிடம் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், திருச்சி ரயில்வே போலீஸ் ஆய்வாளர் மோகனசுந்தரி, உதவி ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், திருமலைராஜா மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (28-04-24) காலை திருச்சி ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த நபர் கடலூர் மாவட்டம் அகரம், தங்காளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ர. கோவிந்தராஜ் (26) என்பதும், அவர்தான் வெங்கடேஷின் சங்கிலியை பறித்தது மற்றும் விருத்தாசலம் ரயில் நிலையத்திலும் இதேபோல ஒரு திருட்டு சம்பவத்தில் அவருக்கு தொடர்பிருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்து திருச்சி மாவட்ட 4 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.