Skip to main content

மிரட்டும் சிறுத்தை... 25 ஆடுகள் பலி... அச்சத்தில் விவசாயிகள்..!

Published on 11/01/2021 | Edited on 11/01/2021

 

leopard in Nellai district Farmers in fear ..!

 

நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரியை ஒட்டியுள்ள விஜய நாராயணம், சங்கனாங்குளம் பகுதிகளில் கடந்த 10 தினங்களாக சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதை அறிந்து, அப்பகுதி விவசாய மக்கள் பீதியில் தங்களின் வயல் வெளிப்பக்கம் போகாமலிருந்தனர். 

 

தகவலறிந்த வனத்துறையும் அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்திக் கண்காணித்தனர். ஆனால், வடக்கு விஜயநாராயணத்தின் ஒரு தோட்டப் பகுதியில் இரண்டு பசுக்களைக் கடித்துத் தின்றிருக்கிறது சிறுத்தை. வனத்துறையினர், அங்கு கூண்டு வைத்தும் சிறுத்தை சிக்கவில்லை. அடுத்து, அதே வடக்கு விஜய நாராயணத்திலுள்ள புஷ்பராஜன் என்பவரது தோட்டத்தில் புகுந்த சிறுத்தை, அங்கிருந்த இளம் பசுங்கன்றைத் தாக்கிவிட்டு, பக்கத்து தோட்டத்திலிருந்த இரு ஆடுகளையும் கடித்துக் கொன்றிருக்கிறது. இப்படி சிறுத்தை அடுத்தடுத்து கால்நடைகளைக் கொன்றொழித்துக் கறியைத் தின்றதால் விவசாயிகள் அச்சத்தில் உறைந்தனர்.

 

இதனிடையே, நேற்றைய தினம் (10/01/2021) வீராணஞ்சேரி கிராமத்தின் பிச்சைப் பழம் என்பவரின் விவசாய தோட்டதில் புகுந்த சிறுத்தை, அங்கு 150 ஆடுகள் கிடை போட்டிருந்ததில் 25க்கும் மேற்பட்ட ஆடுகளின் கழுத்தைக் குறி வைத்துக் கடித்ததுடன், ஆடுகளின் சதைப் பகுதிகளையும் கடித்துப் பிய்த்ததில் அத்தனையும் மாண்டு போயின என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதில், நான்கு ஆடுகள், காயத்துடன் தப்பியுள்ளன. இதன் சேதார மதிப்பு ரூ.2 லட்சத்திற்கும் மேல் என்கிறார்கள் விவசாயிகள்.


சம்பவத்தைப் பார்த்தால், ஒன்று அல்லது இரண்டு சிறுத்தை வந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. அதனால்தான், இத்தனை ஆடுகள் தாக்கப்பட்டுள்ளன என்ற பீதியை வெளிப்படுத்தும் விவசாயிகள், தங்களின் விவசாய நிலங்களுக்குப் போனால் தங்களின் மீதும் சிறுத்தை பாய்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் விவசாயம் செய்ய முடியாத நிலையை வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

 

leopard in Nellai district Farmers in fear ..!


மேலும், ஆடுகளைக் தாக்கியவிதம், அதன் கால் தடயம் போன்றவைகளைச் சுட்டிக்காட்டி விவசாயிகள் வனத்துறையினரிடம் புகார் தெரிவித்தபோது, ‘கால் நடைகளைக் கடித்தது நாயாகக்கூட இருக்கலாம். தவறான தகவலைக் கொடுக்கும் பட்சத்தில் அவர்கள் மீது வழக்குப் போட்டு உள்ளே தள்ளுவோம்’ என்று வனத்துறையினர் மிரட்டுவதாக விவசாயிகள் தெரிக்கின்றனர்.

 

வனத்துறையினரின் கூற்றுப்படி நாயாக இருந்தால் மொத்தமாக 25க்கும் மேற்பட்ட ஆடுகளைக் கடிக்க வாய்ப்பில்லை. அதே போன்று கடித்த முறையும் மாறுபட்டிருக்கிறது, சிறுத்தையின் கடிபோன்றுதான் உள்ளது என்று விவரமாக கூறுகிறார்கள். இதனிடையே கால்நடைத்துறையினர், தாக்குதலுக்குட்பட்ட ஆடுகளின் பாகத்தை ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களைத் தொடர்ந்து அச்சுறுத்தி வந்த சிறுத்தை; கூண்டு வைத்துப் பிடித்த வனத்துறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
leopard caught in a cage while hunting cattle near Thalavady

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் சிறுத்தைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாயத் தோட்டத்தில் புகுந்து ஆடு மாடுகளைக் கொன்று வருவது தொடர்கதையாகி வருகிறது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று தாளவாடி அடுத்த   மல்குத்திபுரம் தொட்டியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவரின் 6 ஆடுகளையும், 2கன்று குட்டிகள், 20 வான்கோழி, 5 காவல் நாய் ஆகியவற்றை வேட்டையாடி கொன்றது. இதைத்தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள கால்நடைகளையும் அந்தச் சிறுத்தை கொன்று  வந்தது.  அதே போல் கடந்த 3 நாட்கள் முன்பு அதே பகுதியில் உள்ள பாக்கியலட்சுமி என்பவரின் வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவானது. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.

தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி மக்களை அச்சுறுத்தி வரும்  சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினருக்கு  கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு பாக்கியலட்சுமி தோட்டத்தில் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர். கூண்டின் ஒரு புறம் காவல் நாயை கட்டி வைத்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அந்தப் பகுதிக்கு வந்த சிறுத்தை  கூண்டில் இருந்த நாயை வேட்டையாட கூண்டுக்குள் சென்றபோது கூண்டில் சிக்கி உள்ளது. இன்று காலை கூண்டில் இருந்து பயங்கரமாக சத்தம் வந்ததால் அப்பகுதி மக்கள் சென்று பார்த்த போது சிறுத்தை கூண்டில் சிக்கியிருப்பது தெரிய வந்தது.

இந்தத் தகவல் காட்டு தீ போல் பரவியதால் சிறிது நேரத்தில் பாக்கியலட்சுமி தோட்டத்திற்கு அப்பகுதி மக்கள் திரண்டு வந்தனர். பின்னர் இது குறித்து தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் லாரியில் வந்து கூண்டுடன் சிக்கிய சிறுத்தையை லாரியில் ஏற்றி அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு செல்ல அழைத்து சென்றனர். கிட்டத்தட்ட ஒரு மாதமாக அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியதால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Next Story

பிடிபட்ட 4 கோடி; ஒரே நேரத்தில் அவகாசம் கேட்கும் நயினார் நாகேந்திரன் & இ.டி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
4 crore caught; ED, Nayanar Nagendran, who asked for time at the same time

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன்  அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியைச் சேர்ந்த ராகவன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நெல்லையில் பாஜக சார்பில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சார்பில் கொண்டு செல்லப்பட்ட நான்கு கோடி ரூபாய் பணம் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் சார்பாக வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக திருநெல்வேலி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இருந்து 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக இருவரும் மீதும் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் அமலாக்க துறையில் புகார் அளித்துள்ளேன். உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருவர் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார். இந்த வழக்கு அமலாக்க துறையின் பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு வருவதற்கான முகாந்திரம் உள்ளதா? என அமலாக்கத்துறை தரப்பிற்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர், சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு வராது. இருப்பினும் மனு தொடர்பாக விரிவான பதிலளிக்க அவகாசம் வேண்டும் எனப் பதில் அளித்தனர். அதனைத் தொடர்ந்து வழக்கை நாளை மறுநாளுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.