Skip to main content

நாய்கள் மீது கல்லெறிந்தவருக்கு அடி-வளர்த்தவர் மீது வழக்கு!

Published on 26/06/2022 | Edited on 26/06/2022

 

dog

 

மனிதர்கள் மீதான வளர்ப்பு நாய்களின் பாசமும், வளர்ப்பு நாய்களின் மீதான மனிதர்களின் பாசமும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. காரணம், நாயை வளர்க்கும் ஒவ்வொரு மனிதனும், தான் செலுத்தும் பாசத்தைக் காட்டிலும் பல மடங்கு நன்றியுணர்வையும், பாசத்தையும் அதனிடமிருந்து பெற்றுத் திளைப்பதுதான். தன்னை முற்றிலும் உணர்ந்த ஒரே ஜீவன், தான் செல்லமாக வளர்க்கும் நாய் மட்டுமே என, குடும்பத்தினரைவிட ஒருபடி மேலாக மனதில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறான். அந்த நாய்க்கு ஏதாவது நடந்தால், துடித்துப் போகிறான்.

 

மேலே குறிப்பிட்டுள்ளது, வளர்ப்பு நாய்கள் அனைத்துக்கும் பொருந்தும் அளவுக்கு, வளர்ப்பவர்களுக்குப் பொருந்தாது. மனிதனுக்கு மனிதன் வளர்ப்பு நாய் மீதான அன்பின் விகிதாச்சாரம் மாறுபடும். சரி, நடப்பு நிகழ்வான வளர்ப்பு நாய்கள் குறித்த விஷயத்துக்கு வருவோம். ஸ்ரீவில்லிபுத்தூர்–தோப்பூரில் வசிக்கும் சிவன்பெருமாள், தனது வீட்டில் நாய்களை வளர்த்து வருகிறார். குருபுத்திரன் என்பவர், ஷிப்ட் முடித்துவிட்டு நள்ளிரவு கடந்து அதே ஏரியாவிலுள்ள தனது வீட்டுக்கு டூவீலரில் சென்றார். சிவன்பெருமாள் வீட்டை குருபுத்திரன் கடந்து சென்றபோது, வளர்ப்பு நாய்கள் விடாமல் குரைத்தபடி, கடிக்கவருவதுபோல் அவரை நோக்கி விரைந்துள்ளன. உடனே டூவீலரை ஸ்டான்ட் போட்டு நிறுத்திய குருபுத்திரன்,  அங்கு கிடந்த கல்லை எடுத்து நாய்களின் மீது எறிந்தார். இதனைக் கண்ட சிவன்பெருமாள் ஆத்திரத்தில் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கம்பைக் கையிலெடுத்து குருபுத்திரனின் தலையில் அடித்தார்.  

 

நெற்றியில் ரத்தக்காயத்துடன் வன்னியம்பட்டி காவல்நிலையம் சென்ற குருபுத்திரன்,  நாய்களை வளர்க்கும் சிவன்பெருமாள் தன்னைக் கம்பால் அடித்ததாகப் புகார் கொடுத்துள்ளார்.  சிவன்பெருமாள் மீது சட்டப் பிரிவுகள் 294(b) (பொது இடத்தில் ஆபாசமாகத் திட்டியது), 324 (மிருகத்தை அபாயம் விளைவிக்கப் பயன்படுத்தியது) மற்றும் 506(ii) (கொலை மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவாகியிருக்கிறது.

 

வளர்ப்பு நாய் மீது என்னதான் பாசமிருந்தாலும், சகமனிதனும் தன்னைப்போல் ஒரு உயிரினமே என்பதை மறக்கலாமா? 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.