Skip to main content

பொங்கல் பண்டிகையன்று பரபரப்பை ஏற்படுத்திய இரட்டைக் கொலை...

Published on 16/01/2020 | Edited on 16/01/2020

நெல்லை மேலப்பாளையம், வேடுவர் காலனிப் பகுதியை சேர்ந்தவர் தங்கமுத்து. இவரது மனைவி சூரியசந்திரமதி. இவர்கள் இந்த பகுதியில் சொந்தமாக வீடுகட்டி கடந்த 16 வருடங்களாக வசித்து வருகின்றனர். தங்கமுத்து மதுரையில் டீ கடை நடத்தி வருகிறார்.

 

land issue causes ruckus in thirunelveli

 

 

குடும்ப நிகழ்ச்சி, விழாக்காலங்களில் மேலப்பாளையத்தி்ற்கு வருவது வழக்கம். இந்நிலையில் தற்போது பொங்கல் திருவிழாவிற்காக இவர் மேலப்பாளையம் வந்துள்ளார். ஏற்கனவே இவரது வீட்டிற்கும் அருகில் உள்ள ஜெயராஜா என்பவர் வீட்டிற்கும் இடையே ஒரு குறுக்குச்சுவர் உள்ளது. இந்த இடப்பிரச்சனை தொடர்பாக இருவருக்கு முன்விரோதம் இருந்து வந்த நிலையில், அடிக்கடி தகராறும் நடக்கும் என கூறப்படுகிறது. கடந்த தீபாவளி பண்டிகை அன்றும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு மேலப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இருவரையும் பேசி சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர் .  இந்த இடப்பிரச்சனை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த சூழலில் கடந்த வாரம் தங்கமுத்துக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது. 

தங்கமுத்துக்கு இரண்டு மகன்கள் , மூன்று மகள்கள் உள்ளனர். இதில் ஒரு மகள் சுமதி என்பவர் கணவர் ஆறுமுகத்துடன் பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியில் குடியிருந்து வருகிறார். சுமதி மேலப்பாளையம் உழவர்சந்தையில் காய்கறி கடை வைத்துள்ளார். இன்று பொங்கல் பண்டிகையொட்டி தனது தந்தை வீட்டிற்கு தனது மகன் ஜெகதீசுடன் சுமதி வந்துள்ளார் . அப்போது தந்தையும், மகளும் இடப்பிரச்சனையுள்ள அந்த சுவருக்கு வெள்ளையடிக்க முயற்சித்ததாக தெரிகிறது. ஏற்கனவே தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வராத நிலையில் ஆத்திரத்தில் இருந்த ஜெயராஜா, தனது இரண்டு மகன்களுடன் தங்கமுத்துவிடம் தகராறு செய்துள்ளார் . தகராறு முற்றவே மூன்று பேரும் சேர்ந்து தங்கமுத்து அவரது மகள் சுமதி ஆகியோரை வாளி மற்றும் கம்பியால் அடித்து தாக்கியுள்ளனர் .

இதில் இரண்டு பேரும் பலத்த காயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தகராறின் போது மகன் கண்முன்னேயே தாய் சுமதி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி தகவல் அறிந்ததும் மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி இரண்டு பேர் உடலையும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கான அனுப்பி  வைத்தனர். இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, கொலை செய்துவிட்டு தப்பியோடிய ஜெயராஜா மற்றும் அவரது மகன்கள் ஆகிய 3 பேரையும் தீவிரமாக தேடிவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்