Skip to main content

மறைந்த எம்.பி. வசந்தகுமாரின் உடல் நல்லடக்கம்!

Published on 30/08/2020 | Edited on 30/08/2020

 

kanyakumari mp h vasanthakumar peoples

மறைந்த கன்னியாகுமரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

 

தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவரும், கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினருமான எச்.வசந்தகுமார் நேற்று முன்தினம் (28/08/2020) மாலை சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்.

 

இதையடுத்து, எச்.வசந்தகுமார் எம்.பி.யின் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. அங்கு பொதுமக்கள் மற்றும் வசந்த் & கோ நிறுவன ஊழியர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் வசந்தகுமாரின் உடலுக்கு மலர்வளையம் வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

 

அதன்பிறகு, எச். வசந்தகுமாரின் உடல் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் புதுச்சேரி மக்களவை உறுப்பினர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வசந்தகுமார் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

 

அதைத் தொடர்ந்து வசந்தகுமாரின் உடல் அவரின் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் ஆஸ்டின், சுரேஷ் ராஜன், அதிமுக சார்பில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந் வடநேரா, ஆர்.டி.ஓ. மயில் மற்றும் பொதுமக்கள், வசந்த் & கோ ஊழியர்கள் உள்ளிட்டோர் வசந்தகுமாரின் உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

 

இதையடுத்து வசந்தகுமாரின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர்.

 

கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்தில் உள்ள அவரது சொந்த நிலத்தில் தந்தை, தாய் நினைவிடம் அருகில் வசந்தகுமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்