Skip to main content

மனைவியுடன் சண்டை; விஷம் குடித்தும் சாகாததால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவர்

Published on 08/02/2023 | Edited on 08/02/2023

 

kallakurichi thirukovilur sempadai village vetrivel incident 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள செம்படை கிராமத்தைச் சேர்ந்தவர் வீரன் என்பவரது மகன் வெற்றிவேல் (வயது 30). இவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு வேம்பு என்பவருடன் திருமணம் ஆகி, இவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். வேம்புக்கும் வெற்றிவேலுக்கும் அடிக்கடி குடும்பப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக கடந்த ஒன்றாம் தேதி இரவு மதுபானத்தில் எலி பேஸ்ட் கலந்து குடித்த வெற்றிவேல் தனது இறப்புக்கு காரணம் தனது மனைவி மற்றும் உறவினர்கள் தான் என்று அவர்கள் மீது பல குற்றச்சாட்டுகளைக் கூறி, அதை தனது செல்போனில் வீடியோவாக பேசி பதிவு செய்து விட்டு மயங்கி விழுந்துள்ளார். மறுநாள் காலை மயக்கம் தெளிந்து எழுந்துள்ளார். அதனைத் தொடர்ந்து வெற்றிவேல் அடுத்த முயற்சியாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது குடும்பத்தினர் குடும்பப் பிரச்சினை குறித்து எதையும் வெளியே சொல்லாமல் வெற்றிவேல் உடலை அடக்கம் செய்துவிட்டனர்.

 

அதன் பிறகு கடந்த 4ஆம் தேதி வெற்றிவேல் மனைவி வேம்பு, அவரது தந்தை மாரி, தாய் சோலையம்மா, சகோதரிகள் மாலா, கௌரி, அஞ்சலை, தமயந்தி, நவநீதம் உட்பட அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஒன்று கூடி வெற்றிவேலுக்கு சொந்தமான சொத்தை எப்படி பங்கு பிரிப்பது என்பது குறித்து பேசியுள்ளனர். அப்போது வெற்றிவேல் தந்தை வீரன், அவரது மனைவி பூங்காவனம், மகள் வள்ளியம்மை ஆகியோர் பாரபட்சமாக பேசுவதாகக் கூறியுள்ளனர். இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் வெற்றிவேல் தந்தை, தாய் மற்றும் சகோதரி ஆகியோர் காயமடைந்து, மூன்று பேரும் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்த தகவல் மணலூர்பேட்டை போலீசாருக்கு தெரியவந்தது. மேலும், இது குறித்து வெற்றிவேல் தங்கை வள்ளி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

 

அவரது புகாரின் பேரில் போலீசார் வேம்பு மற்றும் அவரது உறவினர்கள் 13 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் சம்பந்தப்பட்ட உறவினர்களான செந்தில்குமார், மணிகண்டன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். வெற்றிவேல் இறப்பதற்காக எலி பேஸ்ட் சாப்பிடும் போது தனது இறப்புக்கு காரணம் தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் என செல்போனில் பேசி வீடியோவாக பதிவு செய்த காட்சி நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிவேல் தற்கொலை விஷயத்தை போலீசாருக்கு தெரியாமல் மறைத்ததோடு, அவரது உடலை அடக்கம் செய்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.