தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, மத்திய அரசுக்கு ஆர்வம் இல்லை என்றே தெரிகிறது என்று உயர்நீதிமன்ற கிளை கருத்துத் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நிதியை ஒதுக்கி, கட்டுமானப் பணியைத் துரிதப்படுத்த உத்தரவிடக்கோரி ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இரண்டு மாதமாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் நிலம் கையகப்படுத்துவதில் சில பிரச்சனைகள் இருப்பதால் காலதாமதம் ஏற்படுவதாக அரசுத் தரப்பில் விளக்கம் தரப்பட்டது. மேலும், இன்று இந்த வழக்கில் அரசுத் தரப்பில் கூடுதல் வழக்கறிஞர் ஆஜராக அவகாசம் கோரியதை அடுத்து, வழக்கு சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான வழக்கில், இரண்டு மாதங்கள் ஆகியும் முறையாகப் பதில் அளிக்காதது வருத்தம் தருகிறது. இதிலிருந்து தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசுக்கு ஆர்வம் இல்லை என்றே தெரிகிறது. இதேநிலை தொடர்ந்தால் சுகாதாரத்துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக நேரிடும் என எச்சரித்த நீதிபதிகள், வழக்கை சிறிது நேரம் ஒத்திவைத்தனர்.