Skip to main content

மடிக்கணினி திட்டத்திலும் மெகா ஊழல் - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Published on 09/01/2021 | Edited on 09/01/2021

 

students free laptops tn govt dmk party mkstalin

 

15.66 லட்சம் மாணவர்களுக்காக ரூபாய் 1,921 கோடி மதிப்பில் மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “1921 கோடி ரூபாய் மதிப்பில் மாணவ, மாணவியருக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் பிரம்மாண்டமான ஊழலில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். மாணவ, மாணவியருக்கு 15.66 லட்சம் மடிக்கணினிகள் வழங்குவதற்காக எல்காட் நிறுவனம் டெண்டர் விட்டுள்ளது. அந்த டெண்டரில் சீன நிறுவனம் ஒன்று பங்கேற்று - அந்நிறுவனத்திடம் இருந்து எப்படியும் மடிக்கணினிகள் வாங்குவதென்ற ஒரே உள்நோக்கத்துடன் நடைபெற்றுள்ள “ஊழல் திருவிளையாடல்கள்” பேரதிர்ச்சியளிக்கின்றன.

 

மடிக்கணினிகள் வழங்கும் திட்ட டெண்டரில் சீன நிறுவனம் பங்கேற்று மடிக்கணினிகள் குறித்த இரு மாதிரிகளை (Model) அளித்து, அதன் சோதனை அறிக்கையையும் (Test Report) கொடுத்திருந்தது. ஆனால் இரு மாதிரி மடிக்கணினிகளுக்கும் ஒரே விலை என்று கூறியிருக்கிறது. இந்த டெஸ்ட் ரிப்போர்ட்டுகளை ஆய்வு செய்ததில் ஒரு மாடல் மடிக்கணினியின் செயல்திறனுக்கு 465 மதிப்பெண்களும், இன்னொரு மாடல் மடிக்கணினியின் செயல்திறனுக்கு 265 மதிப்பெண்களும் என இரு வேறு செயல்திறன் கொண்டதாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே, இரு மாடல்களில் ஒன்று தரம் குறைந்தவை என்று கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை என்பது போல் தெரிய வந்தது. ஒரு மாடல், குறைந்த செயல்திறனே உள்ள மடிக்கணினி என்று அந்நிறுவனம் அளித்த டெஸ்ட் அறிக்கையிலேயே வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டு விட்டது. ஆனால் அமைச்சர், தகவல் தொழில்நுட்ப செயலாளர், எல்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எல்லாம் ‘கூட்டணி’ வைத்து சீன நிறுவனத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்கள். விளைவு; குறைந்த செயல்திறன் கொண்ட மாடல் மடிக்கணினியை சப்ளை செய்ய ஆர்டர் கொடுத்து இதன் மூலம் ஒரு மடிக்கணினிக்கு 3 ஆயிரம் ரூபாய் வீதம் அதிகம் கொடுக்கப்பட்டு, அந்த சீன நிறுவனம் அடைந்த சட்டவிரோத லாபம் மட்டும் 469 கோடி ரூபாய் என்று எல்காட் நிறுவனத்தின் எல்லா சாளரங்களிலும் எழுதப்படாத குறையாக, ஊழல் தண்டோரா ஒலி எழுப்புகிறது. 

 

மடிக்கணினி முறைகேடு இத்துடன் நின்றுவிடவில்லை. எதிர்காலத் தொழில்நுட்பத்தைக் கருத்தில் கொண்டு மடிக்கணினியில் ‘மெமரி 4 ஜி.பி.யிலிருந்து 8 ஜி.பி.யாக’ அதிகரிக்கும் வசதி இருக்க வேண்டும் என்று டெண்டரில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 4 ஜி.பி. சேர்க்கப்பட்டால் மாணவ மாணவியர் புதிய மடிக்கணினி வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சீன நிறுவனம் வழங்கிய மடிக்கணினியில் இந்த வசதி இல்லை. இதுபற்றி மாணவர்களும், பெற்றோர்களும் பலமுறை புகாரளித்தும் விசாரணை என்ற பெயரில் கண் துடைப்பு நாடகம் நடத்தினார்களே தவிர, அதற்குத் தீர்வு காணவில்லை. அதற்குப் பதில் கூடுதலாக ஒரு லாபத்தையும் அந்த சீனக் கம்பெனிக்கு ஏற்படுத்திக்கொடுக்கவே இந்தப் புகார்களை ‘சுயநலத்துடன்’ பயன்படுத்திக்கொண்டனர். மேற்கண்ட வசதியைப் பெற வேண்டுமானால் புதிதாக ஒரு மதர் போர்டைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அந்த மதர் போர்டின் விலை ரூபாய் 2500 என்றும், மேலும் 392 கோடி ரூபாய் சட்ட விரோத லாபம் அந்த சீனக்கம்பெனிக்கு தாராளமாக அ.தி.மு.க. ஆட்சியில் தாரை வார்க்கப்பட்டுள்ளது.

 

‘மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கிய அரசு’ என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் முதலமைச்சர் பழனிசாமி, தனது அமைச்சரவை சகாவுடன் இணைந்து, 1921 கோடி ரூபாய் மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் நிகழ்த்தியுள்ள மாபாதக மெகா ஊழல் இது. மொத்த நிதி ஒதுக்கீட்டில் 1465 கோடி ரூபாய் அந்த சீனக் கம்பெனிக்கு தற்போது வழங்கப்பட்டுவிட்டது என்றும், மீதியுள்ள 456 கோடி ரூபாயை, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிய வருகிறது. அப்படி வழங்குவது அரசு கஜானாவில் பகல் கொள்ளை நடத்துவதற்கு இணையானது.

 

எனவே, மாணவ, மாணவியருக்குத் தரமற்ற மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தில், இந்த மாபெரும் ஊழலுக்கு வித்திட்டுள்ள முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக மீதமுள்ள 465 கோடி ரூபாயைச் சீன நிறுவனத்திற்கு வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட சீன நிறுவனத்தை எவ்விதத் தயக்கமும் இன்றி ‘பிளாக் லிஸ்ட்’ செய்து, தரக்குறைவான மடிக்கணினி வழங்கியதற்காகப் பெருந்தொகையினை அபராதமாக அந்த நிறுவனத்திடமிருந்து வசூலிக்க உத்தரவிட வேண்டும் என்றும், பெற்றோரும், மாணவ, மாணவியரும், ஆசிரியர்களும் எதிர்பார்க்கிறார்கள்.” இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.