Skip to main content

“பிரதமரின் அறிவிப்பை விவசாயிகள் ஏற்றுக்கொள்வதில் சிரமம் இருக்கிறது” - பாலகிருஷ்ணன் பேட்டி!

Published on 23/11/2021 | Edited on 23/11/2021

 

"It is difficult for farmers to accept the Prime Minister's announcement" -Balakrishnan interview

 

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி இன்றுவரையிலும் விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 19.11.2021 அன்று மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். மேலும்> புதிய வேளாண் சட்டங்களை முறைப்படி திரும்பப் பெற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்தார்.

 

இந்நிலையில், மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக பிரதமர் அறிவித்த பின்னும் போராட்டத்தை தொடர்வது குறித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கே. பாலகிருஷ்ணன் சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “விவசாயி விரோத 3 வேளாண் சட்டங்களைக் கடந்த நவம்பர் 19 அன்று பிரதமர் ரத்து செய்வதாக அறிவித்த நிலையில், சம்யுக்த கிசான் மோர்ச்சா ஏற்கனவே அறிவித்தபடி போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவித்துள்ளது. விவசாயிகளைப் பொறுத்தவரையில் விவசாயிகளின் வருமானத்தை நான்கு ஆண்டுகளில் இரட்டிப்பாக்குவோம். 

 

அனைத்து விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படும் போன்ற எந்த வாக்குறுதிகளையும் பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றவில்லை. எனவே பிரதமரின் அறிவிப்பை விவசாயிகள் ஏற்றுக்கொள்வதில் சிரமம் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், போராட்டத்தைத் தொடங்கும்போது வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதோடு மேலும் இரண்டு முக்கிய கோரிக்கைகளையும் விவசாயிகள் முன்வைத்திருந்தார்கள். மின்சார சட்டத் திருத்த மசோதா 2020 திரும்பப் பெறப்பட வேண்டும்; அனைத்து விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படுவதோடு, அதை உத்தரவாதப்படுத்த சட்டம் இயற்றப்பட வேண்டும்.

 

தற்போது பிரதமர் 3 கோரிக்கைகளில் முதல் கோரிக்கையான வேளாண் சட்டடங்களை இரத்து செய்வதாக, அதுவும் விவசாயிகளோடு பேச்சுவார்த்தை நடத்தாமல் அவராகவே அறிவித்திருக்கிறார். மற்ற இரண்டு கோரிக்கைகளும் நிலுவையில் உள்ளன. மேலும் இந்தப் போராட்டக் களத்தில் சுமார் 700 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு நினைத்திருந்தால் உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்கலாம். உயிரிழந்த குடும்பங்களுக்குத் தக்க இழப்பீடு அளிக்கப்பட வேண்டும். நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.  

 

லக்கிம்பூர் கேரி விவசாயிகள் படுகொலையின் சூத்திரதாரியான மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட வேண்டும். நேற்று (22.11.2021) விவசாயிகளின் மகாபஞ்சாயத்து லக்னோவில் நடைபெற்றது. அதில், 26.11.2021 அன்று போராட்டத்தின் ஓராண்டு நிறைவு தினம் நாடு முழுவதும் நினைவுக்கூறப்படும் எனவும், 29.11.2021 முதல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற குளர்கால கூட்டத்தொடரின்போது டிராக்டர்களில் பேரணியாகச் சென்று போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். நவம்பர் 26 அன்று மாவட்ட தலைநகர்களில் தொழிலாளர்களோடு இணைந்து பேரணிகள் நடத்தவும், அன்று மாலை 4 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் ஓராண்டு நினைவு தின பொதுக்கூட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

தண்ணீர் தட்டுப்பாடு ; தாக்குபிடிக்குமா 'சென்னை'

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Water scarcity; Attacking 'Chennai'

கோடைகால வெயிலின் தாக்கம் தீவிரமடைந்திருக்கும் நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசும் மேற்கொண்டு வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீர்ச்சத்து குறைபாட்டை தடுக்கும் உப்பு சர்க்கரை கரைசல் எனும் ஓ.ஆர்.எஸ் கரைசலை ஆயத்தமாக வைத்திருக்க தமிழக சுகாதாரத்துறைக்கு அரசு அறிவுறுத்தல் கொடுத்துள்ளது. 

கோடை காலங்களில் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் வெயிலின் தாக்கத்தை தனித்து கொள்வதற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றைத் தாண்டி மூன்றாவது காரணியாக பார்க்கப்படுவது குடிநீர் தட்டுப்பாடு. சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம் நடத்துவது போன்ற செய்திகள் தென்படுவதே இதற்கான சான்று. அதேபோல் கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டை அதிகம் கையாளும் இடமாக சென்னை உள்ளது. பல்வேறு ஏரிகளில் உள்ள நீர் இருப்பை நம்பியே சென்னையின் குடிநீர் தட்டுப்பாடு நீக்கப்பட்டு வருகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் மிக முக்கியமான ஏரி புழல் ஏரி. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. தற்போது புழல் ஏரியில் இருக்கும் நீரின் அளவு 2,942 மில்லியன் கன அடி ஆகும். வினாடிக்கு 570 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 217 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அடுத்து சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது சோழவரம் ஏரி. 1,080 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் தற்போது 118 மில்லியன் கன நீர் மட்டுமே உள்ளது. தற்போது நீர்வரத்து இல்லாத நிலையில் சோழவரம் ஏரியில் இருந்து 168 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  அடுத்தது செம்பரம்பாக்கம் ஏரி. சென்னை குடிநீர் தேவையில் முக்கிய பங்காற்றுகிறது. மொத்தம் 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் தற்போது நீர் இருப்பு 2,384 மில்லியன் கன அடியாக இருக்கிறது. நீர்வரத்து இல்லாத நிலையில் வினாடிக்கு 46 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சென்னையின் அடுத்த குடிநீர் ஆதாரம் பூண்டி ஏரி. 3,231 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் நீர் இருப்பு 978 மில்லியன் கன அடியாக உள்ளது. இந்த ஏரிக்கும் நீர்வரத்து இல்லாத நிலையில் வினாடிக்கு 525 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டு காணப்படும் நிலை இருக்கிறது. 1,475 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் நீர் இருப்பு கணக்கிட முடியாத அளவிற்கு மிகவும் குறைவாக இருக்கிறது. வீராணம் ஏரியில் நீர்வரத்தும் இல்லை நீர் வெளியேற்றமும் இல்லாத சூழ்நிலை இருக்கிறது.

இப்படி மொத்தமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.75 டிஎம்சி ஆக இருக்கிறது. இதில் வீராணம் ஏரி முற்றிலும் வறண்டு விட்ட நிலையில் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் உள்ளிட்ட ஏரிகளில் தற்பொழுது 6.88 டிஎம்சி நீர் மட்டுமே இருக்கிறது. வரும் கோடை காலத்தில் இந்த அளவு தண்ணீரே சென்னையின் குடிநீர் பிரச்சனையை தீர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.