Skip to main content

முறைகேடு செய்த ஊராட்சி நிர்வாகம்; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை 

Published on 09/05/2023 | Edited on 09/05/2023

 

Irregularity Giving permission for buildings in Nallampalli panchayat of Dharmapuri district

 

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஊராட்சியில் கட்டடங்களுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு செய்த ஊராட்சி நிர்வாகம். அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

 

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்டது நல்லம்பள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சியில் தனியாக வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய குழு அலுவலகம், வட்டார வேளாண்மை அலுவலகங்கள், வட்டார மருத்துவமனை, பேருந்து நிலையம், வாரச்சந்தை, மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்தும் அமைந்துள்ளது. 

 

மாவட்டத்தில் அதிக வருவாய் ஈட்டக்கூடிய ஒரே ஊராட்சியாக நல்லம்பள்ளி ஊராட்சி இருந்து வருகிறது.  நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட 32 ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களும் அரசு அலுவலர்களும் ஆயிரக்கணக்கானோர் நல்லம்பள்ளி ஊராட்சிக்கு தினந்தோறும் வந்து செல்கின்றனர். மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் காரணத்தினால் அனைத்து விதமான வணிக நிறுவனங்கள் அதிக அளவில் பெருகி நல்லம்பள்ளி ஊராட்சிக்கு அதிக லாபத்தை ஈட்டி வருகிறது. 

 

Irregularity Giving permission for buildings in Nallampalli panchayat of Dharmapuri district

 

இந்த நிலையில் கட்டட அனுமதிகள், கல்லூரி அனுமதிகள் உள்ளிட்ட அனைத்திலும் தவறான வழிமுறைகள் மூலம் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இதனால் அரசுக்கு வரவேண்டிய வருவாயில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. கட்டட அனுமதி வழங்க வேண்டும் எனில் ஊராட்சி நிர்வாகத்தை பொறுத்தவரை 2000 சதுர அடிக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும். அதற்கு மேல் உள்ள கட்டடங்கள் அனைத்தும் டிடிசிபி அனுமதி பெற்று பிறகு ஊராட்சி அனுமதியைப் பெற வேண்டும் என்ற அரசு விதிமுறை உள்ளது. ஆனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே பல் பொருள் அங்காடி தற்பொழுது மிகவும் பிரம்மாண்டமான அளவில் 13 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவில் மூன்று தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. 

 

ஊராட்சி நிர்வாகத்தில் உள்ள ஊராட்சி செயலாளரும், தலைவரும் சேர்ந்து கட்டட அனுமதி வழிகாட்டு விதிமுறைகளைப் பின்பற்றாமல் 1500 சதுர அடி என்ற வீதம் 3 பிரிவாகப் பிரித்து 4500 சதுர அடிக்கு மட்டும் அனுமதி வழங்கி கட்டடம் இயங்குவதற்கு அனுமதி அளித்துள்ளார். அதேபோல் சேலம் தர்மபுரி நெடுஞ்சாலையில் உள்ள மிகப்பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர், சேஷம்பட்டி கூட்ரோடு பகுதியில் சுமார் 10000 சதுர அடி பரப்பளவில் தற்பொழுது அமைய உள்ள டைல்ஸ் ஷோரூமிற்கு 2000 சதுர அடி என்ற வீதத்தில் மூன்று பிரிவுகளாக 6000 சதுர அடிக்கு அனுமதி அளித்துள்ளார். மேலும் பேருந்து நிலையத்திற்கு எதிரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் புதிய கட்டடம் உள்ளிட்ட அனைத்திற்கும் டிடிசிபி அப்ரூவல் பெற வேண்டிய கட்டடங்களை முறைகேடாக ஊராட்சியின் கட்டுப்பாட்டில் வைத்து தனித்தனியாக பிரித்து தனி கட்டடங்கள் போல் காட்டி அவர்களுக்கு அனுமதி கொடுத்துள்ளனர். 

 

நல்லம்பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ள வணிக நிறுவனங்கள், டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள், மருத்துவமனைகள், டைல்ஸ் கம்பெனிகள், கார்மெண்ட்ஸ் நிறுவனங்கள், மாடர்ன் ரைஸ் மில் உள்ளிட்ட அனைத்தும் முறையாக டிடிசிபி அனுமதி பெற்றிருந்தால் அரசுக்கு வர வேண்டிய மற்றும் ஊராட்சி அலுவலகத்திற்கு வரவேண்டிய நிதிகள் நேரடியாக வந்து சேர்ந்திருக்கும்.

 

Irregularity Giving permission for buildings in Nallampalli panchayat of Dharmapuri district

 

தற்போது பணியில் உள்ள ஊராட்சி செயலாளர் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவரால் அரசுக்கு வர வேண்டிய அனைத்து நிதிகளும் கிட்டத்தட்ட 50 லட்சத்திற்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த ஊராட்சியில் நடைபெறும் முறைகேடுகளை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் மாவட்ட நிர்வாகம் முறையாக விசாரணை மேற்கொண்டு ஊராட்சி நிர்வாகத்திற்கும், அரசுக்கு வர வேண்டிய வருவாயை முறையாகப் பெற்றுத்தர  வேண்டும் எனவும், மாவட்ட நிர்வாகத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்திய ஊராட்சி செயலாளர் மற்றும் தலைவர் மீது நடவடிக்கை எடுத்து அவர்கள் அளித்துள்ள கட்டட அனுமதியை ரத்து செய்து புதிய அனுமதியைப் பெறுவதற்கு ஆணையிட வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக - நா.த.க.வினர் இடையே திடீர் மோதல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sudden issue between ADMK and ntk

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினருக்கு காலை 11 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போன்று அதிமுகவினருக்கு காலை 12 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 12 மணிக்கு முன்பாகவே அதிமுகவினர் பாலக்கோடு காவல் நிலையம் அருகே வந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Incident happened to children on love affair in dharmapuri

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(30). இவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தேவி (24, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.

இந்த நிலையில், தேவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்(27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இவர்களது உறவு பாலகிருஷ்ணனுக்கு தெரியவர, தேவியைக் கண்டித்துள்ளார். இதனையடுத்து, தேவி திடீரென வெங்கடேஷ் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த வெங்கடேஷ், தேவியை பழிவாங்கும் நோக்கத்தில் இருந்து வந்துள்ளார். அதன் அடிப்படையில், அவர் நேற்று முன் தினம் (10-04-24) வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த தேவியின் மகன்கள் இருவரையும் அங்குள்ள காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற வெங்கடேஷ், குழந்தைகள் இருவரின் கண்களில் மிளகாய் பொடி தூவியும், கல்லால் தலை மற்றும் காது பகுதிகளில் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த குழந்தைகள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, தகவல் அறிந்து விரைந்து வந்த அதியமான்கோட்டை போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி வெங்கடேஷை கைது செய்தனர். இந்த நிலையில், காவல் நிலையத்தில் இருந்த வெங்கடேஷ் நேற்று, காவல் நிலையத்திற்கு பின்புறமுள்ள ரயில்வே தண்டவாளத்திற்கு தப்பிச் சென்று அங்குள்ள மின் கம்பியைப் பிடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வெங்கடேஷ் மீது மின்சாரம் தாக்கியதில், அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனடியாக அங்கு விரைந்த போலீசார், வெங்கடேஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.