கள்ளக்குறிச்சியில் 50க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் வடபெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் கிடங்கு ஒன்றில் கள்ளத்தனமாக சாராயம் தயாரிக்க பயன்படுத்தும் மெத்தனால் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் அங்கு அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்தக் கிடங்கின் ஒரு அறை பூட்டப்பட்டு இருந்தது. அதன் பூட்டை வெல்டிங் வைத்து அறுத்து உள்ளே சென்று பார்த்தபோது, சுமார் 1500 லிட்டர் மெத்தனால் ரசாயன கலவை கலன்களில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் அங்கிருந்த மெத்தனாலை பறிமுதல் செய்தனர்.
மேலும் அனுமதி இன்றி தடை செய்யப்பட்ட மெத்தனால் ரசாயன கலவையைப் பதுக்கி வைத்திருந்ததாகக் கௌதம், பரமசிவம், ராம்குமார், பென்சிலால் ஆகிய நான்கு நபர்களை கைது செய்தனர். அவர்களிடம், கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு மெத்தனால் வினியோகம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாதேஷ் என்பவர் உடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.