Skip to main content

கோயில் குளத்தை ஆக்கிரமித்து கட்டபட்ட வீடுகள் தண்ணீருக்கு இரையான அவலம்; நாகை பரபரப்பு

Published on 18/02/2020 | Edited on 18/02/2020

நாகப்பட்டினத்தில் கோவில் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளில் எட்டு வீடுகள் அடுத்தடுத்து குளத்தில் சரிந்து விழுந்தது, வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு அலறி அடித்து ஓடிவந்தது பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

 

incident in nagai

 

நாகை வெளிப்பாளையத்தில் உள்ள சிவன்கோயிலுக்கு சொந்தமான குளம் உள்ளது. அந்த குளத்தை சுற்றிலும் 50 க்கும் மேற்பட்ட வீடுகள் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. கடந்த வடகிழக்கு பருவமழையாலும், ஆற்றில் தண்ணீர் வந்ததாலும் வரண்டுகிடந்த சிவன் கோவில் குளம் நிரம்பியது. வரண்டு கிடந்தபோது ஆக்கிரிமித்து கட்டப்பட்ட வீடுகள் அனைத்தும் குளம் நிரம்பி வழிவதால் பின்புறம் சுவர்கள் முற்றிலுமாக ஈரம்காத்து இடிந்துவிழும் நிலைக்கு வந்தது.

 

incident in nagai

 

இந்தநிலையில் இன்று காலை 6 மணிக்கு குளத்தின் வடகரை பகுதியில் கட்டப்பட்டிருந்த சங்கர், கண்ணன், ஆனந்த், பாலு, சுகந்தி உள்ளிட்ட எட்டு பேரின் வீடுகளின் சுவர்கள் அடுத்தடுத்து மளமளவென குளத்தில் இடிந்து விழுந்து மூழ்கியது. இதையடுத்து வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு உயிர் பிழைத்தால் போதும் என கட்டிய துணிகளோடு வீட்டைவிட்டு வெளியில் ஓடினர். தொடர்ந்து வீட்டின் மறுபகுதி சுவர்களும், வீட்டில் இருந்த கட்டில் பீரோ பாத்திரம் என அனைத்தும் அடுத்தடுத்து மளமளவென குளத்துக்குள் சரிந்து மூழ்கியது.

 

incident in nagai

 

விபத்து குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

incident in nagai


இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த மணி என்பவர்கூறுகையில்  " குளம் தூர்வாராமல் பல ஆண்டுகளாக கிடத்ததை சாதகமாக்கிக்கொண்டு, இருக்க இடமில்லா ஏழைகள் குளத்தின் கரையோரம் வீடுகட்டினர், இந்த ஆண்டு எதிர்பாராத வகையில் மழையும், தண்ணீரும் வந்ததால் குளம் நரம்பி வீடும், சுவர்களும் ஓதம் காத்துவிட்டது, தற்போது கடுமையான வெயிலால் சுவர்களின் ஈரம் காய காய வலுவிழந்து சாயத்துாங்கிடுச்சி. விடியற்காலை என்பதால் முதலில் சாய்ந்த வீட்டில் இருந்தவர்கள் கடைகளுக்கும், தண்ணீர் எடுக்கவும் சென்றுவிட்டனர், அதனால் உயிரிழப்பு இல்லாமல் போயிடுச்சி அடுத்தடுத்த வீடுகளில் உள்ளவர்களும் வெளியில் வந்துவிட்டனர். தற்போது வீட்டில் அனைத்தையும் இழந்துவிட்டு நிற்பவர்களுக்கு அரசு தனி இடம் ஒதுக்கி வீடுகட்ட உதவி செய்யவேண்டும்," என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தாயோடு நீச்சல் பழகிய குழந்தைகள்; 3 பேர் உயிரிழப்பு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Children who swim with their mother; 3 people lost their lives

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பிச்சநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40.) இவரது மனைவி பவித்ரா (30). இத்தம்பதியினரின் மகன் ரித்திக் (9),மகள் நித்திகா ஸ்ரீ (7). தற்போது கோடை விடுமுறையில் பிள்ளைகள் வீட்டில் இருந்துள்ளனர். பவித்ரா தினமும் தனது பிள்ளைகளை அருகில் உள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்று, நீச்சல் பழக கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதன்படி இன்று பவித்ரா தனது பிள்ளைகளுடன் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். குளிக்கப்போனவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடத்துவங்கினர். அப்போது சிறுமி நித்திகாஸ்ரீ கிணற்றில் சடலமாக மிதப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வேப்பங்குப்பம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பங்குப்பம் காவல் துறையினர் ஒடுக்கத்தூர் தீயணைப்பு துறையினரின் உதவியோடு கிணற்றில் சடலமாக கிடந்த மூன்று பேரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிணற்றில் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக தாய் உட்பட 3 பேரும் கிணற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என முதல் கட்டமாகக் கூறப்படுகிறது. கோடை காலம் தொடங்கிய நிலையிலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையிலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மருத்துவம் பார்ப்பது போல் வந்து தம்பதியைக் கழுத்தறுத்து படுகொலை; அதிரவைத்த கொடூரச் சம்பவம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Shocking incident on strangled the couple in chennai

ஆவடி அருகே மிட்டனமல்லி காந்தி மெயின் ரோடு இரண்டாவது குறுக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சித்த மருத்துவர் சிவன் நாயர். இவர், தனது வீட்டிலேயே மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி பிரசன்னா குமாரி. இவர் மத்திய அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவர். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். இவர்களது மகன், இதே பகுதியில் சித்த மருத்துவம் பார்த்து வருகிறார். இவர்களது மகள் வெளிநாட்டில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வழக்கம் போல், இன்று சிவன் நாயர் தனது வீட்டில் சிகிச்சை பார்த்து வந்துள்ளார். அப்போது, சிகிச்சை பார்ப்பது போல வந்த மர்ம நபர்கள் சிவன் நாயர் மற்றும் அவரது மனைவி பிரசன்னா குமாரி ஆகியோரை கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். இது குறித்து அக்கம் பக்கத்தினர் முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முத்தாபுதுப்பேட்டை போலீசார், உயிரிழந்த தம்பதியின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய அரசு நிறுவனங்கள் அமைந்துள்ள பிரதான பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதை அடுத்து 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் வீட்டில் இருந்த நகை பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனரா? என்றும், குடும்ப தகராறு காரணமாக கொலை நடத்தப்பட்டு இருக்குமா? என்ற கோணங்களிலும் முத்தாபுதுப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆவடி காவல் ஆணையரக பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை, கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்தப் பகுதியில், எங்கும் சி.சி.டி.வி கேமராக்கள் இல்லாததால் குற்றவாளிகளைப் பிடிக்க போலீசாருக்கு சவாலாக உள்ளது எனக் கூறப்படுகிறது. ஆவடியில் கணவன் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.