Skip to main content

"ஊரடங்கால் வருமானம் இல்லை''- எஸ்.பி. அலுவலகத்தின் முன் ஆட்டோவை கொளுத்தி, தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ தொழிலாளி!  

Published on 19/08/2020 | Edited on 19/08/2020
AUTO

 

கடலூர் கம்மியம்பேட்டை பராசக்தி கோவில் தெருவைச் சேர்ந்த சங்கரலிங்கம் என்பவரின் மகன் சுரேஷ்(38). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று(18.08.2020) மாலை ஆறரை மணி அளவில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்திற்குள் தனது ஆட்டோவுடன் சென்றார்.

பின்னர் அங்கு ஆட்டோவை நிறுத்தி தான் கையில் வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்து ஆட்டோ மீது ஊற்றி தீ வைத்துக் கொளுத்தினார். பின்னர் அவரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதைப் பார்த்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார்  ஓடி வந்து ஆட்டோவில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இருப்பினும் ஆட்டோவின் மேல் பகுதி எரிந்து சேதமானது.  இதையடுத்து அவரை மீட்ட கடலூர் புதுநகர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவருக்கு குடும்ப அட்டை இல்லாததால் அரசு நலத்திட்ட உதவிகளைப் பெற முடியவில்லை என்றும், அரசு வழங்கிய ரூபாய் 1,000 கரோனா நிவாரண நிதி கூட கிடைக்கவில்லை, கடன் வாங்கி ஆட்டோ வாங்கி இருந்த நிலையில் ஊரடங்கினால் சரிவர வருவாய் கிடைக்கவில்லை, போதிய வருமானம் இல்லாததால் ஆட்டோ கடன் தவணையும் கட்டமுடியவில்லை. இதனால் விரக்தி அடைந்து என்ன செய்வது என்று தெரியாமல் ஆட்டோவுக்கு தீவைத்துத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறியுள்ளார்.

இதற்கிடையே அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் போலீசார் அவரை கடலூர் அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

சார்ந்த செய்திகள்