Skip to main content

சோழர்களைப் போற்ற தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவித்த முக்கிய அறிவிப்பு

Published on 20/03/2023 | Edited on 20/03/2023

 

An important announcement announced by the Tamil Nadu government in the budget to honor the Cholas

 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 - 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் தாக்கல் செய்கிறார். இதில் தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டுத் துறைக்கு திட்டங்கள் கூறப்பட்டு அதற்கான பட்ஜெட் வாசிக்கப்பட்டது. 

 

2023 -2024 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் வகையில் நிதியமைச்சர் முன் வரிசையில் நின்று படிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நிதியமைச்சர் தனது உரையை துவங்கும் போதே அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். “கொஞ்சம் அமைதியாக இருங்கள். பட்ஜெட் வாசிக்கட்டும். அதன் பின் பேசலாம். உங்களுக்கு பேசுவதற்கு நேரம் தருகிறேன்” என சபாநாயகர் கூறியும் அதிமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். 

 

அதிமுகவினரின் அமளிக்கிடையே தொடர்ந்து பட்ஜெட் வாசிக்கப்பட்டது. இருந்தபோதும் தமிழக பட்ஜெட்டை புறக்கணித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதன்பின் சபாநாயகர் அப்பாவு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாசித்த பட்ஜெட்டைத் தவிர எதுவும் அவைக் குறிப்பில் ஏறாது எனக் கூறினார்.

 

தொடர்ந்து பட்ஜெட்டை வாசித்த நிதியமைச்சர், “தேசிய அளவோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு அதிக பொருளாதார வளர்ச்சியை எய்துள்ளதோடு வருவாய் மற்றும் நிதிப்பற்றாக்குறை ஆகியவற்றை மத்திய அரசை விடக் குறைத்துள்ளோம்.  நாங்கள் பதவி ஏற்கும் போது சுமார் 62 ஆயிரம் கோடி இருந்த வருவாய் பற்றாக்குறையை நடப்பாண்டின் திருத்த மதிப்பீடுகளில் சுமார் 30 ஆயிரம் கோடி மதிப்பிற்கு குறைத்துள்ளோம்.

 

2006 முதல் 2011 வரை மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் சராசரி 8% ஆக இருந்த மாநிலத்தின் சொந்த வரி வருவாய் அடுத்த 10 ஆண்டுகளில் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு 2020 - 2021 ஆம் ஆண்டு 5.58% ஆக குறைந்தது. அதிக தொழில் நிறுவனங்களைக் கொண்ட மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் இது குறைவு. கடந்த ஆண்டுகளில் எடுத்த முயற்சியின் பயனாக 6.11% ஆக உயர்ந்துள்ளது.

 

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராசன் ஆகியோரது நினைவைப் போற்றும் வகையில் நினைவிடம் அமைக்கப்படும். அம்பேத்கரின் சிந்தனைகளைப் பரப்புவதற்காக அவரது படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும். இதற்காக அரசால் 5 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும்.

 

தொழில்நுட்பத்துறையில் தமிழ் மொழியின் பயன்பாட்டினை அதிகரிப்பதன் மூலம், தமிழ் உலக மொழியாக வளர்வதற்கு புகழ்பெற்ற வல்லுநர்களைக் கொண்டு தமிழ்கணினி பன்னாட்டு மாநாடு நடத்தப்படும். தமிழர் பண்பாட்டு தளங்களை இணைக்க தமிழ் பண்பாட்டு கலை வழிப்பயணங்கள் ஊக்குவிக்கப்படும். 

 

வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு கட்டணமில்லா பேருந்து வசதியை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. வரும் ஆண்டில் 591 வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு இச்சலுகையை அரசு வழங்கும். சென்னையில் நடத்தப்பட்ட சங்கமம் கலை விழா வரும் ஆண்டுகளில் மேலும் 8 முக்கிய நகரங்களில் விரிவுபடுத்தப்படும். இதற்காக 11 கோடி ரூபாய் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 25 பகுதிநேர நாட்டுப்புறக்கலை பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.

 

சோழர்களின் பங்களிப்பை போற்றவும், அக்கால கலைப்பொருட்கள் மற்றும் நினைவுச் சின்னங்களை பாதுகாக்கவும் தஞ்சாவூரில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்” எனக் கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்